சமூக வலைதளங்களில் ஆதார் எண்? சென்னை ஹைகோர்ட் வழக்கில் இணைந்த மஹூவா மொய்த்ரா எம்.பி.
சென்னை: சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை அடையாளப்படுத்தும் வகையில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் தம்மையும் ஒருவாதியாக சேர்க்க வேண்டும் என்று மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ரா மனுத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் தமது முதலாவது உரையின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் மஹூவா மொய்த்ரா. பாசிசம் எப்படி உருவாகும் என்கிற அவரது நாடாளுமன்ற உரையானது பெரும் விவாதத்துக்குரியதானது.
இதனிடையே சமூக வலை தளங்களில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்கிற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என ஃபேஸ்புக் நிர்வாகம் வலியுறுத்தி இருக்கிறது.
இன்று முதல் 4 நாள் உடனடி வங்கி கடன்.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க!
இவ்வழக்கில் அனைத்து தரப்பும் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா எம்.பி. ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை இணைப்பது என்பது தனிநபர் உரிமையை பாதிப்பதாக இருக்கிறது. தற்போதைய வழக்கின் போக்கு தனிநபர் உரிமை பாதுகாப்புக்கு எதிராக இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கில் தம்மையும் ஒருவாதியாக சேர்க்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருக்கிறார் மொய்த்ரா.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மேற்கு வங்கத்தின் எம்.பி. மொய்த்ரா மனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.