வாசனின் டெல்லி முகாம் வீணா போச்சே.. தொடர் தோல்வியால் துவண்டு போன தமாகா தொண்டர்கள்
ஜிகே வாசன் இனி என்ன செய்ய போகிறார் என்பது தெரியவில்லை
சென்னை: எப்படியும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் ஜிகே வாசன், டெல்லிக்கு போய் காய்களை நகர்த்த ஆரம்பித்தார். ஆனால் அதற்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. தொடர் தோல்வி காரணமாக தமாகா தொண்டர்கள் பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனராம்!
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி நடத்தி வரும் வாசன், யாருடன் கூட்டணி வைப்பது என்று போன தேர்தலிலும், இந்த தேர்தலிலும் கூட்டணிக்காக கொஞ்சம் திணறிதான் போனார்.
அதேபோல எங்கே போய் கூட்டணி வைத்தாலும் குறைந்தது 3 சீட்டாவது கேட்டு விட வேண்டும் என்பதும், அதற்கு கூட்டணி தலைமை மறுப்பு சொல்வதும் தொடர்ந்து நடந்தே வருகிறது.
குமாரசாமி மகன் நிகில் பற்றி சர்ச்சை செய்தி.. நாளிதழ் எடிட்டர் மீது பாய்ந்தது வழக்கு
தமாகா
இந்த முறையும், அப்படித்தான் நடந்து தமாகாவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டார். தோல்வியை தழுவினார். போன முறை 24 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, ஒரு இடத்தில் கூடவெற்றி பெறாமல் போய்விட்டது என்றால், இந்த முறை ஒரே தொகுதியான தஞ்சையில் போட்டியிட்டும் வேட்பாளர் நடராஜன் படுதோல்வியை தழுவினார்.
தனிக்கட்சி
இப்படி தொடர்ந்து 2 பொது தேர்தல்களிலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல், தமாகா உள்ளதால், இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரிய சோர்வை ஏற்படுத்தி உள்ளது. சுருக்கமாக சொல்ல போனால், அப்பா போல் தனிக்கட்சி துவங்கிய, வாசனால் ஜொலிக்க மட்டுமல்ல, ஜெயிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதரவு
இதனிடையேதான் வாசனின் அந்த டெல்லி பயணமும் அமைந்தது. தேர்தல் முடிவுக்கு முன்பாகவே அங்கு போய் முகாமிட்டார் வாசன். என்ன காரணம் என்று வெளிப்படையாக தெரியவில்லை. ஒருவேளை தஞ்சையில் வெற்றி பெற்றால், மத்தியில் யார் ஆட்சி நடந்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவு தரலாம் என வாசன் முடிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ராஜ்ய சபா
ஆதரவு அளிப்பதுடன், தனக்கு எப்படியாவது ராஜ்யசபா எம்பி பதவியையும், மத்திய அமைச்சர் பதவியையும் கேட்டு வாங்குவது என்றும், அந்த கட்சியுடனே தமாகாவையும் இணைத்து விடலாம் என்று யோசித்து வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் இது எல்லாமே இப்போது தவிடு பொடியாகிவிட்டது.
கட்சி பலம்
தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலாளர், 2 முறை ராஜ்யசபா எம்பி, 2 முறை மத்திய அமைச்சர் என்று பல பதவிகளை வகித்த வாசனால், இன்று தொடர் தோல்வியால் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் இந்த நிலை நீடித்தால், தமாகா என்ற கட்சியை தொடர்ந்து நடத்துவது சிரமம் என்ற அபாயமும் உருவாகி உள்ளது. இதையெல்லாம் வாசன் சமாளிப்பாரா? பார்ப்போம்!