மீண்டும் உடைந்தது தமுமுக- பொதுச்செயலர் ஹைதர் அலி நீக்கம்- பொதுக்குழுவில் தீர்மானம்!
சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஹைதர் அலியை நீக்கி அதன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தமமுக மீண்டும் உடைந்துள்ளது.
தமுமுக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இஸ்லாமியர்களின் அரசியல் இயக்கங்கள். இதில் இருந்து தமீமுன் அன்சாமி விலகி மக்கள் ஜனநாயக கட்சி தொடங்கினார்.
இதன்பின்னர் பொதுச்செயலாளர் ஹைதர் அலி, தலைவர் ஜவாஹிருல்லா இடையே கருத்து வேறுபாடுகள் உச்சகட்டத்தை அடைந்தன. சில மாதங்களுக்கு முன்னர் இருதரப்பும் சமரசமானது.
ஆனாலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொதுக் குழுக் கூட்டம் சிங்கப்பெருமாள்கோவில், கே.ஆர்.ஜி. திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் குழுக் கூட்டத்தில் மாநில மற்றும் 53 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தலைமை பொதுக் குழுக் கூட்டத்தில் பின் வரும் தீர்மானம் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. "நமது கழகத்தின் பொதுச் செயலாளர் சகோ. செ.ஹைதர் அலி தொடர்ந்து கழகத்தின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையிலும், கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் கழகத்தின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடந்த 6.2.2019 அன்று "உங்கள் மீது ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்று பதில் கேட்டு கடிதம் அனுப்பினார்.
அதில் ஐந்து குற்றச்சாட்டுகள் வரையப்பட்டன. கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, 22.2.2019 தேதியிட்டு தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் தலைவரின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எந்தக் குற்றச்சாட்டையும் மறுக்கவில்லை, மாறாகத் தலைவர் மீதும் தலைமை நிர்வாகிகள் மீதும் சேற்றை வாரியிறைத்திருக்கிறார். எனவே, குற்றச்சாட்டு மறுக்கப்படாத நிலையில், குற்றச்சாட்டு ஒப்புக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும், எனினும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும் நோக்கில் 11.6.2019 தேதியிட்ட கடிதம் பொதுச் செயலாளருக்கு தலைவரால் அனுப்பப்பட்டது.
19.6.2019 அன்று நடக்கவிருக்கும் தலைமை நிர்வாக குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இக்கடிதம் அனுப்பப்பட்டது. பொதுச்செயலாளர் மேற்சொன்ன கூட்டத்திற்கு வர மறுத்து 15.6.2019 தேதியிட்ட கடிதத்தை அனுப்பி 11.6.2019 தேதியிட்ட தலைவரின் கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மேற்சொன்ன கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தன் கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பொதுச் செயலாளர் தன் தவற்றை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளாமல் இதன் பின்பும் தொடர்ந்து கழகத்தின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையிலும், கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.
எனவே, நமது கழகத்தின் கட்டுப்பாட்டையும், விதிமுறைகளையும் காப்பாற்ற தற்போது பொதுச் செயலாளராகப் பொறுப்பில் இருக்கும் சகோ. செ. ஹைதர் அலி அவர்களைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று இந்த தலைமை பொதுக் குழு தீர்மானிக்கிறது".
தமுமுக வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஆகஸ்ட் வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் இறுதியில் வெள்ளிவிழா மாநாட்டை நடத்துவதென இப்பொதுக் குழு தீர்மானிக்கப்பட்டது.
துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜா கனி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு பொதுச் செயலாளராக செயல்படுவார். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.