நள்ளிரவில் திடீர் நெஞ்சு வலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதி
Recommended Video
சென்னை: நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது நெஞ்சுவலிப்பதாக முகிலன் கூறியதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நீதிபதி ரோஸ்லின் உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார்.
கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸடைர்லைட் ஆலை, எட்டு வழிச்சாலை,ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் திட்டங்களுககு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன் (52)/ தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி கூறியிருந்தார். அதன் பிறகு ஐந்து மாதங்களாக அவரை காணவில்லை.
சிபிசிஐடி விசாரணை
அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்ளும் முகிலனை கண்டுபிடித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணையை விரிவு படுத்தும் வகையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்ட்டது. கடந்த 5 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் அவரை தேடிவந்தனர்.
எழும்பூரில் விசாரணை
இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட முகிலன் தமிழக காவல்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து வேலூரில் மருத்துவ பரிசோதனை செய்த போலீசார் அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
திடீர் நெஞ்சுவலி
பின்னர், முகிலனை ராயபுத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது தமக்கு நெஞ்சு வலி என முகிலன் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பிடத்தை கூற மறுப்பு
இதனிடையே முகிலன் கைது குறித்து சிபிசிஐடி வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முகிலனை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன நாட்களில் தாம் எங்கிருந்தேன் என கூற முகிலன் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.