தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருமா?.. அப்டியே வந்தாலும் எப்படி தடுக்கலாம்?.. வேளாண்துறை
சென்னை: வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு படையெடுத்து வராது. அப்படியே வந்தாலும் அதை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் குறித்து தமிழக வேளாண்துறை பட்டியலிட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வெட்டுக்கிளிகள் பல்வேறு பயிர்களை படையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சியாகும்.
இந்த வெட்டுக்கிளிகள் தொடர்ச்சியாக சூழலுக்கேற்றவாறு தனது டிஎன்ஏவை தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. உணவு அதிகமாக கிடைக்கும் காலம், தங்கள் உயிர் வாழ்வதற்கான ஏற்ற சூழல் என்பதை சரியாக உணர்ந்து கொண்டுதான், இவை முட்டையிலிருந்து இளம் உயிரியாக பிறந்து, முதிர் உயிரியாக மாறி இனப்பெருக்கம் செய்து பயணிக்கின்றன. தொடர்ச்சியாக சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் இருப்பதாலேயே இவற்றை கட்டுப்படுத்துவது சிரமமாகும்.
ஜெய்ப்பூரில்... மொட்டை மாடி முழுவதும்.. வெட்டுக்கிளிகள்.. சாரை சாரையாக.. பரபரக்கும் வீடியோ!
பாலைவனப் பகுதிகள்
இதன் ஆயுட் காலமானது 6 முதல் 8 வாரங்களாகும். தனது ஆயுட்காலத்தில் மூன்று முறை வெட்டுக்கிளி முட்டையிடுகிறது, இலைகளுக்கு கீழ் பகுதியில் மட்டுமின்றி ஈரமான மண்தரையிலும் முட்டையிடக் கூடியது. அறுவடைக்கு தயாராக விளைந்து கிடக்கும் வேளாண் பரப்பு எங்குள்ளது என்பதை அறிந்து காற்றின் திசையில் பயணிப்பதால் இவற்றால் ஏற்படும் பாதிப்பு என்பது மிகவும் அதிகம். பாலைவனப் பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரே நாள் 80, 500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும்.
ஐநா எச்சரிக்கை
இது ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும். கென்யா, சோமாலியா, எத்தியோபியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான் நோக்கி புலம் பெயர தொடரும் எனவும் இவை இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஏற்கெனவே ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எச்சரித்திருந்தது.
வெட்டுக்கிளி படையெடுப்பு
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் The Locust Warning Organisation (LWO) மூலம் வெட்டுக்கிளி படையெடுப்பு தொடர்பான அறிவிப்புகள் பெறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்தது கண்டறியப்பட்டது. பொதுவாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பானது பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வரும்.
பிப்ரவரி வரை
ஆனால் இந்த ஆண்டு ஜெய்ப்பூர் வரையிலும், இந்தியாவின் மத்திய பகுதியான மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயம் உள்பட பகுதிகளில் காற்றின் திசை காரணமாக வந்துள்ளது. சரியாக 26 ஆண்டுகள் கழிந்து கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் நிகழ்ந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, நடப்பாண்டு பிப்ரவரி வரைக்கும் தொடர்ந்தது.
தக்காண பீடபூமி
ராஜஸ்தான் மாநிலத்தில் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால் 1000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்த வரையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியைத் தாண்டி இதுவரை வந்ததில்லை. எனவே தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
கட்டுப்படுத்தும் முறைகள்
எனினும் இதன் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஒரு வேளை வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால் கீழ்கண்ட முறைகளை பின்பற்றி அவற்றைக் கட்டுப்படுத்தலாம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
கட்டுப்படுத்தும் முறைகள்
வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பயிர் பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகள் மருந்தை பயன்படுத்திடலாம்.
- மாலத்தியான் மருந்தை தெளிப்பான்கள், பெரிய டிராக்டர் மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்திடலாம்.
- உயிரியல் கட்டுப்பாடு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- வெட்டுக்கிளிகளை சாப்பிடும் கோழி மற்றும் பறவைகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.
- அரசு அனுமதியுடன் பூச்சிமருந்தை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.