அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவு - மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாக உள்ளது எனவும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாக உள்ளது எனவும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் உயிரிழந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறுதி சடங்கு நிகழ்வுக்கு சென்ற போது திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று பாதித்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 90 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனைக்கே நேரில் சென்று கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாக உள்ளது எனவும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் துரைக்கண்ணுவின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் அமைச்சரின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அவருக்கு 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடுமையான மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என்று முடிவு வந்தது.
பல்வேறு உடல் நல பிரச்சினைகளோடு இருக்கும் அமைச்சர் துரைக்கண்ணுவின் மிக சமீபத்திய சிடி ஸ்கேன் ரிப்போர்ட்படி, அவரது நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் தற்போது எக்மோ சிகிச்சை, வெண்டிலேட்டர் ஆகியவற்றின் அதிகபட்ச ஆதரவைப் பெறுகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து அமைச்சரின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். அமைச்சரின் குடும்பத்தினரோடும் தனிப்பட்ட முறையில் உரையாடினார். தற்போது துரைக்கண்ணு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.