நீட் தேர்வில் இருந்து விலக்கு: மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக எம்.பிக்கள் நேரில் வலியுறுத்தல்!
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்து மனு அளித்தது.
நீட் நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறவில்லை. அரியலூர் அனிதா தொடங்கி 15 மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்து மரணித்துள்ளனர்.
இதனால் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு தர வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக கட்சிகளின் வேண்டுகோள். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் நீட் தேர்வு விவகாரம் முக்கியமான பேசுபொருளாக இருந்தது.
சட்டசபை தீர்மானம்
தற்போதைய திமுக ஆட்சி தொடக்கம் முதலே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாஜக தவிர்த்து அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிலும் சென்று வலியுறுத்தினார்.
டெல்லியில் எம்.பிக்கள் குழு
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மனுவை அளித்தனர். மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தமிழக எம்.பி.க்கள் குழு வலியுறுத்தியது. கொரோனா பரவல் காரணமாக ஜனாதிபதி மாளிகையில் இம்மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முயற்சித்தது. தமிழக எம்.பி.க்கள் குழுவுக்கு முதலில் நேரம் ஒதுக்கிய அமித்ஷா பின்னர் அதை ரத்து செய்தார்.
அமித்ஷா மறுப்பு- அனைத்து கட்சிக் கூட்டம்
இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மனுவை தமிழக எம்.பி.க்கள் குழு கொடுத்தனர். அப்போது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் தராத தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக எம்.பி.க்கள் குழுவை அமித்ஷா சந்திக்காததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய அனைத்து கட்சிக் கூட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கூட்டினார். அக்கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும்; நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு
இதனிடையே தமிழக எம்.பி.க்கள் குழுவை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (ஜன.17) சந்திக்க நேரம் ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதையடுத்து இன்று காலை தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டது. டெல்லியில் இன்று மாலை தமிழக எம்.பி.க்கள் குழு, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மனுவை வழங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, வேலைப்பளு காரணமாக தமிழக எம்.பி.க்களை சந்திக்கவில்லை என அமித்ஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக எம்.பிக்களை அமித்ஷா சந்திக்காததில் உள்நோக்கம் இல்லை என்றார். நீட் தேர்வு விலக்கு குறித்து கல்வி அமைச்சருடன் பேசி முடிவு சொல்வதாகவும் தமிழக எம்.பிக்கள் குழுவிடம் அமித்ஷா கூறினார்.