75 நாட்களுக்கு பின் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்கள் திறப்பு
சென்னை: கொரோனா லாக்டவுனால் தமிழகத்தில் கடந்த 75 நாட்களாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன.
கோவையில் காவல் நிலையங்களில் நூலக திட்டம்: எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்!
இந்த நிலையில் லாக்டவுனால் மூடப்பட்ட அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நூலகங்கள் திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், பிற நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் நூல்கத்தை பயன்படுத்த அனுமதி இல்லை.
நூலகர்கள், வாசகர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுவர்; வாசகர்களுக்காக நூலகங்களின் நுழைவாயிலில் சோப், தண்ணீர், கிருமிநாசினி வைக்க வேண்டும்.
வெப்பமானி மூலம் நூலக பணியாளர்கள், வாசகர்கள் சோதிக்கப்பட வேண்டும்; நூலகப் பணியாளர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அருகே உள்ள மருத்துவமனை மையங்கள், சிகிச்சை மையங்கள் விவரங்கள் நூலகத்தில் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.