கலை, அறிவியல் கல்லூரிகள்- பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை- ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கு ஜூலை 20-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதனையடுத்து கல்லூரிகள், பாலிடெக்னிக்குள் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிராமத்திலேயே முதல் முறை.. பிளஸ் 2 பாஸான பழங்குடியின மாணவி! நேரில் வாழ்த்திய டிஎஸ்பி.. நெகிழ்ச்சி
109 அரசு கல்லூரிகள்
அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 92,000 இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் மாணவர் எண்ணிக்கை
இதற்கு சுமார் 2 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள். இதுபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்) இயங்கி வருகின்றன. மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்விப் பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்புக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890.
நேரடியாக செல்ல வேண்டும் என்பது நடைமுறை
இதற்கு தோராயமாக 30,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள்.
இனி ஆன்லைனில்...
இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணாக்கர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்பொழுது முதல்வர் உத்தரவின்படி புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tndceonline.org / www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) www.tngptc.in / www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் ஜூலை 20 முதல்..
மாணவர்கள் வரும் 20.07.2020 தேதி முதல் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014, 044-22351015 ஆகியவற்றை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.