மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது
Recommended Video
சென்னை: மேகதாது மட்டுமல்ல காவிரியாற்றில் குறுக்கே எந்த இடத்திலும் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் ரூ. 5600 கோடி செலவில் அணை கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
அந்த ஆணையமும் மேகதாதுவில் ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதை தமிழக அரசு வன்மையாக கண்டித்தது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில் மேகதாது அணைக்கு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடியது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது
கர்நாடக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியதற்கு எதிரான தீர்மானத்தை துணை முதல்வர் முன்மொழிந்தார்.
அப்போது தீர்மானத்தின் மீது முதல்வர் பேசுகையில் இந்த சட்டசபையில் 5.12.2014, 27.3.2015 ஆகிய நாட்களில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ் படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதையும் மீறி, தற்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை துவக்க உள்ளதற்கும் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர் வளக் குழுமம் 22.112018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய நீர் வளக் குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர் வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ கர்நாடகாவில் உள்ள காவேரி படுகையில் மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட தீர்மானத்தின் மீது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.