தமிழக சட்டசபை... 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
சென்னை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன் மற்றும் நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு மணி மண்டபங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மலரும், மாலையும் சூட்டி அழகு பார்த்த, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
நீதிக்கட்சியின் வைரத் தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்திற்கு, திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அரசு சார்பில் மரியாதை
தமிழ்நாட்டில் இதழியல் முன்னோடியும், முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி தமிழ் நாளிதழை தொடங்கி, பாமரரும் பாட்டாளியும் எளிய தமிழ் மூலம் படிக்க வழிவகை செய்த சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, அவரது பிறந்தநாளில் அரசு சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படும்.
அரசு சார்பில் விழா
மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது சென்னையை தமிழகத்தின் தலைநகராக தொடர பாடுபட்டவரும், எழுத்து சீர்திருத்தத்தின் போது ஐ-யும், ஔ-வும் தமிழ் மொழியில் தொடர செய்தவருமான ம.பொ.சிவஞானம் அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவரது பிறந்தநாளில் அரசு சார்பாக மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
சுந்தரலிங்கனார் மணி மண்டபம்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளையருக்கு எதிராக முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய வீரன் சுந்தரலிங்கனாரை சிறப்பிக்க, தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் அமைந்துள்ள மணி மண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைப்பதுடன், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.
ஒண்டிவீரன் மணி மண்டபம்
விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரனை சிறப்பிக்கும் விதமாக, திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைப்பதுடன், அவ்வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
ராஜ வாய்க்கால்
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற "ராஜ வாய்க்கால்" ஏற்படுத்திய அல்லாள இளைய நாயகருக்கு ஜேடர்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் குவிமாடத்துடன் திருவுருவச் சிலை அமைக்கப்படும்
சிலையுடன் கூடிய மணிமண்டபம்
விவசாயிகளின் நலனைக் காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டுத் திட்டம் தொடங்க காரணமாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டர் அவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக, கோவை மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் ரூ.1 கோடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், நூலகமும் அமைக்கப்படும்
மணிமண்டபத்துடன் நூலகம்
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசனை பெருமைபடுத்தும் விதமாக, அவர் பிறந்த இடமான மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.
முத்தரையர் மணி மண்டபம்
கி.பி.7 ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.