திமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம்? முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல்!!
சென்னை: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் கிடையாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது கடுமையான விமர்சனங்களுடன் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. ஆனால் வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு மீது பாமக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
20% வன்னியர் தனி ஒதுக்கீடு கோரிக்கையை கூட எம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு என இறங்கி வந்தது பாமக. ஆனாலும் அதிமுக அரசு தரப்பில் இதுவரை க்ரீன் சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை என்கிற அதிருப்தியில் பாமக இருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருந்தன.
பாமக நிர்வாக குழு
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற இருந்த பாமக நிர்வாக குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. வரும் 31-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ முடிவை பாமக அறிவிக்கும் எனவும் தெரிகிறது.
திமுக அணியில் பாமக?
இதனிடையே திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க வைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்படி பாமக, திமுக கூட்டணிக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தும் இருந்தார்.
திமுக சேர்க்க மறுப்பு
ஆனால் திமுக அணியில் பாமகவுக்கு இடம் இல்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் திமுகவை குறி வைக்கும் 'இலவுகாத்த கிளி' - மருத்துவர் அய்யாவின் பகல் கனவு என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்த கட்டுரையின் தொடர்ச்சி நாளையும் வெளிவருமாம்.
பாமக தனித்துப் போட்டி?
திமுகவை பாமக நெருங்கி வருகிறது என ரெக்கைகட்டி பறந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக முரசொலி இந்த கட்டுரையை வெளியிட்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனால் அதிமுக- திமுக அணியில் இடம்பெறாமல் பாமக தனித்து போட்டியிடவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது.