அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை- இயல்பாகவே கரையை கடப்பதுதான் புயல்.. இழுத்துவரும் தள்ளுவண்டி அல்ல!
சென்னை: தமிழகத்தில் ரஜினிகாந்த், அழகிரி பரபரப்புகள் போணியாகாத நிலையில் அடுத்த அஸ்திரமாக மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை களமிறக்குகிறது பாஜக ஆதரவு வட்டாரங்கள். ஒரு புயல் என்பது இயல்பாகவே கடலில் பல்வேறு படிநிலைக் கடந்து உருவாகி கரையைக் கடக்க வேண்டும் என்கிற யதார்த்தைப் புரிந்து கொள்ளாமல் இழுத்துவரும் தள்ளுவண்டி என கடலுக்குள் போனால் என்ன ஆகுமோ அந்த கதியில்தான் பாஜக ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் அதிமுக, திமுக என்கிற இருபெரும் திராவிட கட்சிகள் வலிமையான அடித்தள கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த கட்டமைப்புகள் வெறும் கட்சி கிளைகள் மட்டுமல்ல. வாக்கு வங்கிகள். பொதுவாக அதிமுக, திமுகவுக்கு இடையேயான வாக்கு சதவீதம் குறைவானதே. அலை வீசும் தேர்தல்களில்தான் வாக்கு சதவீதமும் கிடைக்கும் இடங்களும் அபரிமிதமாக இருக்கும்.
இந்த சொற்ப வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சி அமைப்பதும் அதிமுக 2வது முறையாக ஆட்சி அமைத்திருப்பதும் நிகழ்ந்திருக்கிறது. கருணாநிதி இல்லாத போதும் திமுகவின் கட்டமைப்பும் சிதையவில்லை. ஜெயலலிதா இல்லாத போதும் அதிமுகவின் கட்டமைப்பு காலாவதியாகவும் இல்லை. இந்த இரு கட்சிகள் எப்போது பாஜகவை முதுகில் சுமந்தாலும் மரண அடி கிடைக்கும் என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் அடிப்படையான யதார்த்தம்.
மக்களிடம் பீதி
இப்படியான ஆகக் குறைந்த அடிப்படை புரிதல் கிஞ்சித்தும் இல்லாமலேயே தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி; பாஜக ஆட்சி என்றெல்லாம் பேசுவது கேட்பதற்கு அந்த கட்சியினருக்கு மட்டுமே தேனாக இனிக்கலாம். ஆனால் இந்த பேச்சுகள் அனைத்துமே பிற மாநிலங்களைப் போல கட்சிகளை கபளீகரம் செய்து அதாவது எம்.எல்.ஏக்களை மிரட்டி ஆட்டைய போட்டு குறுக்குத்தனமான வழியில் தமிழகத்திலும் பாஜக ஆட்சி வந்துவிடுமோ என்கிற பீதியைத்தான் உருவாக்குகிறது. இப்படி பாஜக உருவாக்கும் பீதியானது எதிர்க்கட்சி அணிக்குதான் பேரலையாக வாக்குகளையும் கொண்டு சேர்க்கும்.
சென்னை ஊடகங்கள்தான்
ஆனாலும் அமித்ஷாவை களமிறக்குகிறோம்..ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை களமிறக்குகிறோம் என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் சென்னையில் உட்கார்ந்து கொண்டு ஜம்பம் அடிக்கலாம். தங்களது இருப்புக்காக இவர்களை சென்னைக்கு மெனக்கெட்டு அழைத்துவரலாம். சென்னையை மையமாக கொண்ட ஊடகங்களைக் கொண்டு மயிர்கூச்செறியும் விவாதங்களை நடத்தலாம்.
கிராமங்கள் வாக்கு வங்கிகள்
ஆனால் வாக்கு வங்கிகளால் நிரம்பிக் கிடக்கும் கிராமங்களை இந்த தாக்கம் ஒரு இம்மியளவு கூட சென்று சேராது என்பதை எப்போதுதான் இவர்கள் புரிந்து கொள்வார்களோ தெரியவே இல்லை? ஏனெனில் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவையும் கமல்ஹாசனின் அரசியல் கட்சியையும் இன்னமும் அறியாத பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
வாக்கு வங்கியை ஊடறுக்க முடியுமா?
தங்களால் கொண்டாடப்பட்ட தங்களால் ஏற்றம் பெற்ற இந்த திரைநட்சத்திரங்களாலேயே அவர்களது அரசியல் அபிலாஷைகள், கட்சிகளை கிராமங்கள் இன்னமும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அமித்ஷாக்களும் மோகன் பகவத்துகளும் எப்படி தமிழகத்தின் குக்கிராம வாக்கு வங்கிகளை ஊடறுத்துவிட முடியும்?
பாஜக இல்லாத கிராமங்கள்
திமுக, அதிமுக கிளைகள், உறுப்பினர்கள் இல்லாத ஒரு கிராமத்தையாவது தமிழகத்தில் ஒருவரேனும் காட்டிவிட முடியுமா? ஆனால் பாஜகவுக்கு உறுப்பினர்களே இல்லாத பல்லாயிரம் கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
பாஜக பூத் கமிட்டி
முதலில் பூத் கமிட்டிக்கு ஆளை தேடும் வேலையில் பாஜக இறங்கிவிட்டு பின்னர் பெருந்தலைகளை தேடிபிடித்து கட்சியை வளர்க்கலாம். ஒரு புயல் என்பது கடலில் பல்வேறு படிநிலைகளைத் தாண்டி படிப்படியான மாற்றங்களை அடைந்து கரையை மெல்ல மெல்ல கடக்கும். அது என்ன தள்ளுவண்டியா? கடலுக்குள் போய் இழுத்துவர.. பாஜக நிலைமை என்னமோ அமித்ஷாக்கவையும் மோகன்பகவத்தையும் அப்படித்தான் பரிவாரங்கள் இழுத்துவருவதாக பிம்பங்கள் கட்டமைக்கின்றன. அந்தோ பரிதாபம்!