தொகுதி பங்கீடு: அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை மகிழச்சியாகவும் திருப்தியாகவும் இருந்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. திமுகவிடம் காங்கிரஸ் 35 முதல் 40 இடங்கள் வரை கேட்டிருக்கிறது.
சென்னையில் காங். தலைவர்கள்
ஆனால் திமுகவோ 20 முதல் 25 தொகுதிகளை ஒதுக்க முடியும் என கூறியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான உம்மன் சாண்டி, ரந்தீப் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தனர்.
அறிவாலயத்தில் காங். குழு
சென்னை சத்தியமூர்த்தி பவனில் திமுகவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு சென்னை அண்ணா அறிவாலயம் சென்றது.
தொகுதி பங்கீடு- அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை
அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் காங்கிரஸ் தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியது. திமுக சார்பில் துரைமுருகன், டிஆர் பாலு, கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்; காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, ரந்தீப் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் இந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தினர்.
2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, திமுகவுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. தலைமையுடன் கலந்து பேசி 2-ம் கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.