புதிய பாதை... புதிய கூட்டணியை நோக்கி தேமுதிக... தே.ஜ.கூ.வில் தக்கவைக்க போராடும் பாஜக
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய பாதை, புதிய கூட்டணியை நோக்கி புது பயணத்தை தொடங்கியுள்ளது தேமுதிக.
கடந்த மக்களவைத் தேர்தலில் அரை மனதுடன் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு அங்கு உரிய மரியாதை இல்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
இதனால் இனியும் இப்படியே தொடர்ந்தால் நிர்வாகிகளின் அதிருப்திக்கு ஆளாக கூடும் என்பதால், புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை சத்தமின்றி தொடங்கியுள்ளது தேமுதிக.
வியட்நாமில் மீண்டும் தொற்று.. ரஷ்யாவின் தடுப்பூசியை வாங்க முடிவு
தமிழகம் தழுவிய
தமிழகம் தழுவிய அளவில் தேமுதிகவுக்கு ஒன்றியம் கிளை வாரியாக அமைப்புகள் உள்ள நிலையிலும் அக்கட்சியால் பெரியளவில் சோபிக்க முடியாமல் போனதற்கு காரணம் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு தான். அவர் உடல்நலத்துடன் ஆக்டிவ் அரசியலில் ஈடுபட்ட வரை கட்சி எழுச்சியோடும், கணிசமான வாக்கு வங்கியோடும் இருந்தது. உடல்நலமின்றி விஜயகாந்த் வீட்டில் ஓய்வெடுக்க தொடங்கியது முதல் தேமுதிகவில் பழைய உத்வேகம் குறையத் தொடங்கியது.
அதிமுக-பாஜக கூட்டணி
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அரைமனதுடன் அதிமுக கொடுத்த 5 சீட்களை பெற்றுக்கொண்ட தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட் எதிர்பார்த்தது. இதற்காக எவ்வளவோ முயன்றும் தேமுதிகவை கண்டுகொள்ளவில்லை அதிமுக தலைமை. ஆனால் அதே வேளையில் கூட்டணியில் இடம்பெற்ற அன்புமணி, வாசன் ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக்க வைக்கும் பாஜக
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஒரு முடிவோடு தான் இருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இனியும் அதிமுகவை தாங்கிப்பிடிப்பதில் பயனில்லை எனக் கருதிய அவர், தேமுதிகவின் தேவையை உணர்ந்துள்ள முக்கிய கட்சி ஒன்றுடன் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதை பாஜக விரும்பவில்லை. இதனால் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் தக்க வைக்க பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தை மாதத்திற்குள்
கடந்த காலங்களை போல் இறுதி நிமிடம் வரை கூட்டணி விவகாரத்தில் குழப்பிக்கொள்ளாமல் இந்த முறை தை மாதமே ஒரு நல்ல முடிவை எடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் எல்.கே. சுதீஷூம், பிரேமலதாவும். பொங்கல் பண்டிக்கைக்குள் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு முன் கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கவேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது தேமுதிக.