பரிதாப தேமுதிக! அதிமுகதான்- பிரேமலதா; முடிவே செய்யலை- விஜயபிரபாகரன்.. தனித்தும் கூட போட்டி- சுதீஷ்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பது தேமுதிகதான். தேமுதிகவை பிடியில் வைத்திருக்கும் விஜயகாந்த் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருவது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் திமுகவையே பின்தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக கோலோச்சிய தேமுதிகவின் இன்றைய நிலை நிச்சயம் அயர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி என்பதே தேமுதிகவின் தொடக்க கால முழக்கம்.
இதனை ஒவ்வொரு கூட்டத்திலும் தாரக மந்திரம் போல முழங்கினார் விஜயகாந்த். 2009 லோக்சபா தேர்தலில் தேமுதிக 10.3% வாக்குகளைப் பெற்று திமுக, அதிமுகவுக்கு ஷாக் கொடுத்தது. இதனால்தான் 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இணைத்து கொண்டார் ஜெயலலிதா.
அதிமுக-திமுக- தேமுதிக
அந்த தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்று சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாகவே வந்தது தேமுதிக. இதனால் தேமுதிக, கூட்டணி கட்சிகளுக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. 2016 சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 55 தொகுதிகள் வரை கிடைக்கும் நிலை கூட இருந்தது.
பேராசை மநகூ
ஆனால் விஜயகாந்த் குடும்பத்தினர் எடுத்த பேராசை முடிவுகளால் முதல்வர் கனவுடன் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்தது தேமுதிக. அந்த பேராசையே தேமுதிகவின் எதிர்காலத்துக்கு முடிவுரையும் எழுதிவிட்டது. 2019 லோக்சபா தேர்தலின் போது ஒரே நேரத்தில் திமுக- அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கேலிக்கூத்துகளை நடத்தியது தேமுதிக. கடைசியில் வேறுவழியே இல்லாமல் அதிமுக பரிதாபப் பட்டு தந்த 4 சீட்டுகளை பெற்றது அந்த கட்சி. ஆனாலும் படுதோல்விதான். ஆனால் விஜயகாந்த் குடும்பத்தினர் எடுத்த பேராசை முடிவுகளால் முதல்வர் கனவுடன் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்தது தேமுதிக. அந்த பேராசையே தேமுதிகவின் எதிர்காலத்துக்கு முடிவுரையும் எழுதிவிட்டது. 2019 லோக்சபா தேர்தலின் போது ஒரே நேரத்தில் திமுக- அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கேலிக்கூத்துகளை நடத்தியது தேமுதிக. கடைசியில் வேறுவழியே இல்லாமல் அதிமுக பரிதாபப் பட்டு தந்த 4 சீட்டுகளை பெற்றது அந்த கட்சி. ஆனாலும் படுதோல்விதான்.
தேமுதிக குழப்பம்
இப்போதைய சட்டசபை தேர்தலிலும் கூட இதுவரை இல்லாத மிக குழப்பமான நிலையில் இருக்கிறது தேமுதிக. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதாவும் அவரது மகன் விஜயபிரபாகரனும் 41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி என பொத்தாம் பொதுவாக பேசினர். இப்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு கூட்டணியிலும் எந்த ஒரு கட்சிக்கும் 41 தொகுதி கிடைக்காது என்கிற யதார்த்தத்தை புரியாமலேயே இப்படியெல்லாம் உளறி வந்தனர் தாயும் மகனும்.
பிரேமலதாவின் பேச்சுகள்
ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். ஆகையால் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கெஞ்சினார் பிரேமலதா. அதிமுகவோ, பாஜகவோ தேமுதிகவை சீண்டவே இல்லை. வேறுவழியே இல்லாமல் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என இறங்கியும் வந்தார் பிரேமலதா. ஆனாலும் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக, தேமுதிகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
தேமுதிகவை சீண்டாத அதிமுக
இதனால் சசிகலாவை திடீரென ஆதரித்து பேசினார் பிரேமலதா. அதே ஜோரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனவும் விமர்சித்தார். அதாவது அதிமுகவிடம் பேரம் பேசும் சக்தியை கூட்டுகிறோம் என்கிற போக்கில் பிரேமலதாவின் பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த பேச்சுகள் அதிமுகவிடம் இருந்து தேமுதிகவை தள்ளியே வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
விஜயகாந்த் குடும்பத்தினர் பேச்சுகள்
இன்னொரு பக்கம் எந்த கூட்டணி என இதுவரை முடிவே செய்யவில்லை என்கிறார் பிரேமலதா மகன் விஜயபிரபாகரன். இவர்தான் திமுக- அதிமுக யார் 41 சீட் தந்தாலும் ஓகே என உளறியவர். இவரது பேச்சை எல்லாம் அதிமுக கண்டுகொள்ளவில்லை. அதேபோல் ராஜ்யசபா எம்பி சீட், மத்திய அமைச்சர் பதவி என ரொம்பவே கனவுடன் இருக்கும் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ், 234 தொகுதிகளிலும் தனித்துகூட போட்டி என பேட்டி தருகிறார்.
தேமுதிகவுக்கு 9 சீட் மட்டுமே..
இந்த நிலையில்தான் உள்ளதும் போச்சு என்கிற கணக்காக அதிகபட்சம் 9 சீட் என்கிற ஒரு தகவலை தேமுதிகவுக்கு அனுப்பி வைத்தது அதிமுக. அவ்வளவுதான் ஒட்டுமொத்த விஜயகாந்த் குடும்பமே ஆடிப் போய்விட்டது. தேமுதிகவின் இப்போதைய நிலை இந்த 9 சீட்டை ஏற்பதா? அல்லது சசிகலா குடும்பத்தின் அமமுகவுடன் இணைவதா? அல்லது திமுக அணியில் இருந்து ஏதாவது கட்சிகள் வெளியேறி வந்தால் அதனுடன் கூட்டணி வைக்கலாம் என இலவு காத்து கொண்டிருப்பதா? எனும் படுபரிதாபத்தில் இருக்கிறது தேமுதிக. இதனால் அந்த கட்சியில் எஞ்சியிருக்கும் கொஞ்சம் நஞ்சம் தொண்டர்களும் ஆகுற வேலையை பார்ப்போம் என்கிற முடிவுக்கு வரத்தான் நேரிடும் என்பதில் சந்தேகமே இல்லை.