சசிகலாவை சந்திக்கப் போகும் ஹைதர் அலி... முஸ்லிம் வாக்குகள் பிரிகிறதா?
சென்னை: மனித நேய மக்கள் கட்சியின் ஒரு அங்கமான தமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச்செயலாளர் ஹைதர் அலி சென்னையில் இன்று சசிகலாவை சந்திக்க உள்ளார். திமுக கூட்டணியில் மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஹைதர் அலியின் சசிகலாவுடனான சந்திப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா- ஹைதர் அலி இடையேயான பிரச்சனை நீதிமன்றத்துக்குப் போயுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மமகவுக்கு 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக ஜவாஹிருல்லா நேற்று அறிவித்திருக்கிறார்.
வெறும் 2 தொகுதிகள்தானா? என தமமுகவின் சமூக வலைதளப் பக்கங்களில் கடுமையான கொந்தளிப்பை காட்டி வருகின்றனர். இதற்கு பேசாமல் தேர்தலையே புறக்கணித்திருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் சசிகலாவை ஹைதர் அலி சென்னையில் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்லிம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தங்களது அணிக்கு சேர்க்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
இதனால் ஓவைசியை கூட முதலில் அழைத்தது திமுக. ஆனால் இதர முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே ஓவைசி கட்சியை கூட்டணியில் திமுக சேர்க்கவில்லை. தற்போது ஹைதர் அலி, சசிகலாவை சந்திக்கிறார். அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் தினகரனையும் சந்திக்க உள்ளார். இது முஸ்லிம் வாக்குகள் திமுகவுக்கு செல்வதை பிரிக்கக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.