தனிசின்னமா? உதயசூரியனா? திமுகவுடன் மல்லுக்கட்டும் வைகோ... திடீரென வெங்கையா நாயுடுவுடன் சந்திப்பு
சென்னை: திமுக தலைமையுடன் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முரண்பட்டு நிற்கும் நிலையில் சென்னையில் திடீரென துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்துகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதும் திமுகவின் நிலை. ஆனால் மதிமுக உள்ளிட்ட கட்சிகளோ தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்கின்றன.
தனிச்சின்னம் பஞ்சாயத்து
அப்படி தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் சிங்கிள் டிஜிட்டில்தான் தொகுதிகள் தருவோம் என்கிறது திமுக. இதனால் திமுக கூட்டணியில் திடீரென சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது என்கின்றன செய்திகள்.
வைகோ-வெங்கையா நாயுடு சந்திப்பு
இந்த நிலையில் சென்னையில் திடீரென துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை வைகோ நேற்று இரவு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது விவசாய சட்டங்களுக்காக ராஜ்யசபாவை கூட்ட வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்தார் என கூறப்படுகிறது.
திமுகவுக்கு நெருக்கடி தரும் வைகோ?
ஆனால் அரசியல் பார்வையாளர்களோ, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்தான் வைகோ செயல்படுகிறார். வைகோவைப் பொறுத்தவரையில் எந்த கூட்டணியில் இருந்தாலும் கடைசிநேரத்தில் ஏதோ ஒரு பிரச்சனையுடன் வெளியேறுவது கடந்த கால போக்காக இருக்கிறது. இம்முறையும் திமுக கூட்டணியில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறலாம் என்பதை வெளிப்படுத்தும் தொனியில்தான் வைகோவின் இந்த சந்திப்பை பார்க்கலாம் என்கின்றனர்.
வைகோ மீது திமுகவினர் நம்பிக்கை
இருப்பினும் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த தேர்தல் பாஜகவுக்கு நுழைவுக் களமாக பார்க்கப்படுகிறது; பாஜக தமிழகத்தில் காலூன்றிவிடக் கூடாது என்பதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளன. இந்த ஆட்டத்தை வைகோ கெடுத்துவிடமாட்டார் என்றே நம்புவோம் என்கின்றனர் திமுக ஆதரவாளர்கள்.