மக்கள் பிரச்சினைகளில் அவர்கள் பக்கம் நிற்காத கட்சி- வலை வீசும் பெரிய கட்சி..பேச்சுவார்த்தை ஸ்டார்ட்
சென்னை: மக்கள் தொடர்பான எந்தப் பிரச்சினையிலும் மக்கள் பக்கம் நிற்காத கட்சி அது. அக்கட்சியின் தலைவர் என்று தளர்ந்து போனாரோ அன்று முதலே அந்தக் கட்சியும் காலாவதியாகி விட்டது. இருந்தாலும் முக்கியக் கட்சிகள் சில ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் அதற்கு தற்காலிகமாக உயிரூட்டி தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வது என்ன காரணத்துக்காகவோ தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தேர்தலையொட்டியும் அந்த வேலைகள் ஆரம்பமாகி விட்டனவாம்.
எங்க கூட வந்துருங்க, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி செய்கிறோம்.. சிறப்பாக கவனிக்கிறோம்.. ஒரு ராஜ்யசபா சீட் தர்றோம், கூடவே 25 முதல் 30 சட்டசபை சீட்டுகளும் தர்றோம் என்று பொறி வைக்கப்பட்டுள்ளதாம். இதே கட்சியைத்தான் கடந்த தேர்தலின்போது எங்களுடன் ரகசியமாக பேச வந்தார்கள் என்று அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர் பகிரங்கமாக போட்டுடைத்து அசிங்கப்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.. !
தேர்தலுக்கு தேர்தல் அந்த "கூட்டணி மாறி" கட்சி எடுக்கும் நிலைப்பாடுகள் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகித்தான் வருகின்றன. ஒரே நேரத்தில் ஊரில் உள்ள அத்தனை கட்சிகளுடனும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்திய ஒரே கட்சி இதுதான் என்ற பெருமையை ஏற்கனவே பெற்றிருக்கிறது. அதற்கு முன்பு இந்தப் "பெருமை"யை வைத்திருந்த கட்சி இப்போது அதை விட்டு விட்டது!
மக்களிடம் அன்னியப்பட்ட கட்சி
அத்துடன் தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையிலுமே மக்களின் பக்கமோ, மக்களின் பொது கருத்துக்கு ஆதரவாகவோ ஒருபோதும் நிற்காமல் எதிரணியிலேயே அடம்பிடித்து நிற்கிற கட்சியாகவும் இந்த கட்சி இருந்து வருகிறது. இத்தகைய போக்கால் கட்சி இருக்கிற இடமே தெரியாமல் மக்களிடம் இருந்து வெகுதொலைவுக்கு அன்னியப்பட்டே இருந்து வருகிறது. மக்களிடம் பிரபலத்தை இழந்தும் போய் விட்டது.
கூட்டணி மாறி கட்சியுடன் பேச்சு
இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அத்தனை கட்சிகளும் படுமும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனா காலத்தைக் கூட தேர்தலுக்கான ஆயத்த பணி காலமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. மக்கள் பிழைப்பார்களா, வாக்களிக்க வருவார்களா என்று கூட இவர்களுக்கெல்லாம் கவலையில்லை. கூட்டணிதான், பதவிதான் ரொம்ப முக்கியம். இந்த நிலையில்தான் தமிழகத்தின் அதி முக்கிய கட்சிகளில் ஒன்று இப்போது அந்த "கூட்டணி மாறி"யை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறதாம். முதல் கட்ட பேச்சுவார்த்தையைக் கூட முடித்து விட்டார்களாம்.
என்ன பேரம்?
சென்னையில் நேற்று இது தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதில் அவர்களுக்கு ஏற்கனவே (அதாவது போன தேர்தல் சமயத்தில் ரகசியமாக பின்வாசல் வழியாக பேச்சு நடந்த சமயத்தில்) வழங்கப்பட்ட வாக்குறுதியான ஒரு ராஜ்யசபா சீட் ப்ளஸ் 25 முதல் 30 சட்டசபை தொகுதிகளை கொடுக்கிறோம் என்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எப்படியும் ராஜ்யசபா எம்.பி. சீட் பெற்று மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று 6 ஆண்டுகளாக கனவு மட்டுமே கண்டுவந்த அந்தக் கட்சிக்கு இந்த வாக்குறுதி ஜிலேபியை தேனில் முக்கி சாப்பிட்டது போல தித்திப்பாக இருக்கிறதாம்.
ரகசிய பேச்சுவார்த்தை ஏன்?
பெரிய கட்சியைப் பொறுத்தவரையில் 180 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடும் முடிவில் இருக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த காலங்களைப் போல இல்லாமல் குறைவான சீட்டுகள் கொடுக்கப்படவே வாய்ப்பிருக்கிறது. அணியில் இருக்கும் அடுத்த பெரிய கட்சி இதை ஏற்காது என்று சொல்கிறார்கள். அப்படி அவர்கள் வெளியே போனால் அவர்கள் இடத்தில் இந்த விலை போகாத கட்சிய கொண்டு வரும் திட்டம்தான் பெரிய கட்சியின் இந்த முன்கூட்டிய ரகசிய பேச்சுக்குக் காரணமாம்.
நடக்குமா? கிடைக்குமா?
இது முதல் கட்டம்தான்.. இவர்களாகத்தான் போய் அந்த விலை போகாத கட்சியைப் பேச்சுக்கு அழைத்து பேசியுள்ளனராம். எனவே அந்த விலை போகாத கட்சிக்கு கெத்து கூடி அது போடப் போகும் கண்டிஷன்கள், அலப்பறைகள், அக்கப்போர்கள் என்னவாக இருக்கும் என்று இனிதான் தெரிய வரும். அதேசமயம், விவரம் தெரிந்தோர் சொல்வது என்னவென்றால் 5 சீட்டுக்கு மேல் இந்தத் கட்சிக்கு அந்தக் கட்சி கொடுக்காது.. பணம்தான் அந்த குட்டிக் கட்சிக்கும் பெரிய கவலை.. எனவே பணம் வேண்டுமானால் தருவார்களே தவிர சீட்டெல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது என்று அடித்துச் சொல்கிறார்கள். பேரம் ஆரம்பித்திருக்கிறது.. போகப் போகத் தெரிய வரும்.. வேடிக்கை பார்க்கலாம்.