அரங்கேறப் போவது 2வது தலைநகரமா? தமிழ்நாடு 2ஆக பிரிப்பா? மிரட்டும் அரசியல் கணக்குகள்..லாபம் யாருக்கு!
சென்னை: தமிழகத்தில் மதுரை அல்லது திருச்சியை 2-வது தலைநகராக்க வேண்டும் என்கிற கோரிக்கை திடீரென வேகம் எடுத்திருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்த திடீர் 2-வது தலைநகரம் கோரிக்கை பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது. இன்னொரு பக்கம் பிரளயங்களையும் எழுப்பலாம் எனவும் கூறப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுகதான் அரியாசனத்தில் அமர முடியும் என்பது யதார்த்தம். என்னதான் கட்சிகளை சின்னா பின்னமாக்கினாலும் அதில் யார் கூடுதல் பலமாக இருக்கிறார்களோ அவர்களேதான் ஆட்சி அமைக்க முடியும்.
தமிழகத்தில் பாஜகவால் தனித்து ஆட்சி அமைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றுதான் என்பது அந்த கட்சியினருக்கு தெரியும். திரிபுராவில் பூஜ்ஜியத்தில் இருந்த பாஜக, அப்படியே காங்கிரஸ் கட்சியை விழுங்கியதால் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை அப்படியே விழுங்கியதால் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான சக்தியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
மாநிலங்கள், மாவட்டங்களை நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் உருவாக்கும் முயற்சியை கைவிட திமுக வலியுறுத்தல்
அமைதி காக்கும் பாஜக
ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகவை, திமுகவையோ அப்படியே பாஜகவால் உள்வாங்கி விழுங்கிவிட முடியாது. இதை உணர்ந்துதான் பிற மாநிலங்களில் காட்டிய அரசியல் சித்துவிளையாட்டுகளை தமிழகத்தில் அரங்கேற்றாமல் அமைதி காத்து வருகிறது பாஜக. அதற்காக பாஜக, தமிழகத்தில் எதுவுமே செய்யாமல் இருந்துவிடும் என்றெல்லாம் சொல்லவும் கூடாது. தமிழகத்தில் சலசலப்பை அல்ல பிரளயத்தை ஏற்படுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் பாஜக எந்த நேரத்திலும் உருவாக்கலாம்.
2-வது தலைநகரம் கோரிக்கை
இந்த நிலையில்தான் தமிழகத்தில் திடீர் என்று மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கை பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2-வது தலைநகராக அல்லது தலைநகராகவே திருச்சி இருக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் காலத்தில் இருந்து பேசப்பட்டு வருகிற விவாதம். அதேபோல் தமிழ்நாட்டையே வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் ஒரு காலத்தில் இருந்தது.
பின்னணியில் பாஜக?
இப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்த பின்னரும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடர்ந்து மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்பதற்கான கருத்து கேட்பு நிகழ்வுகளை நடத்துகிறார். இதற்கான பல்வேறு கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறார். இந்த கோரிக்கைக்கு பக்க பலமாக பாஜகவை முழு வீச்சில் ஆதரிக்கும் நாளிதழ் ஒன்றும் தீவிரமாக இருக்கிறது. முதல்வர் நிராகரித்த பின்னரும் அமைச்சரே இந்த கோரிக்கையை முன்னெடுப்பது, பாஜகவின் வாய்ஸ் ஆக கருதப்படும் பத்திரிகையின் முழு ஆதரவு இந்த இரண்டும்தான் 2-வது தலைநகர் விஷயத்தில் பாஜகவின் கைங்கர்யம் குறித்து சந்தேகப்பட வைக்கிறது.
மாநிலங்கள் முறையையே ஒழிப்பது
ஏனெனில் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த சில மாதங்களிலேயே ஒரு விவாதம் எழுந்தது. இந்தியாவின் மாநிலங்கள் என்ற முறையையே அகற்றிவிட்டு 200 ஜன்பத்கள் என்கிற மாவட்டங்களாக உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்திருந்தன. நாடு முழுவடும் 200 ஜன்பத்களாக பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை. ஆகையால் தற்போது எழுந்திருக்கும் புதிய தலைநகரம் கோரிக்கையின் பின்னணியில் பாஜக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாஜகவுக்கு ஆதாயம் தரலாம்
புதிய தலைநகருக்கு பதில் தமிழகத்தை 2 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்கிற பழைய கோரிக்கையும் இப்போது விவாதத்துக்கு வந்துள்ளது. மாநில தலைநகராக்குவது அல்லது மாநிலத்தையே பிரிப்பது என்கிற இந்த இரண்டுமே பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் தரக் கூடியதுதான். தன்னுடைய பிரதான அரசியல் எதிரியான திமுக, ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்கிற பாஜகவின் லட்சியத்துக்கு கை கொடுக்க கூடியதுதான் இந்த திட்டங்கள் என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள். மதுரை 2-வது தலைநகராக்கப்பட்டால் தென்மாவட்டத்தில் ஏற்கனவே செல்வாக்குடன் இருக்கும் அதிமுகவுக்கு அது கூடுதல் வலிமையைத் தரும். இதில் பாஜகவும் ஆதாயம் அடைந்துவிடும். திமுக ஆதரவு வாக்குகளை சிதைக்க வாய்ப்பிருக்கிறது. திமுகவுக்கு கள யதார்த்தத்தில் ஆதரவாக இருப்பது வடதமிழகமும் தென் தமிழகமும்தான். இதில் தென் தமிழகத்தின் வாக்குகளை சிதறடிக்க செய்துவிட்டாலே திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போகும். அப்படி ஒரு கணக்குடன்தான் 2-வது தலைநகரமாக்குவதற்கான தீவிரம் காட்டுகிறார்களோ என்னவோ?
மாநில பிரிவினை சாத்தியமா?
அடுத்ததாக மாநில பிரிவினை என்பது அவ்வளவு எளிதாக நடைபெறக் கூடியது இல்லைதான். ஆனால் அப்படி ஒன்று நிகழ்ந்தால்... நிச்சயம் அது திமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவையே கொடுக்கும். தமிழகம் 2 மாநிலங்களாகப் பிரிக்கப்படும் போது, வடதமிழகத்தில் அதிமுக, பாமக, தேமுதிக இணைந்தும் களத்தில் முழுமையாக நின்றால் திமுகவுக்கு பின்னடைவுதான். கொங்கு மண்டலம் ஏற்கனவே திமுகவை கை கழுவிய பிரதேசம். தென் தமிழகத்தின் வாக்குகளை வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை திமுக கைப்பற்ற முடியாது. ஆகையால் 2-வது தலைநகரம் அல்லது 2 மாநிலங்கள் எதுவானாலும் அது திமுகவை நோக்கி வீசப்படுகிற அம்புதான்; அதில் எப்படியும் தங்களுக்கு ஆதாயம் கிடைத்துவிடும் என்பதுதான் பாஜகவின் கணக்கு.
பாஜகவின் கனவு நனவாகுமா?
ஆனால் 2வது தலைநகர், 2 மாநில பிரிவினை என்பதெல்லாம் எளிதாக சொல்லி விடக் கூடியவை.. திமுகவை ஒழித்து விடலாம், ஆட்சிக்கு வராமல் செய்து விடலாம் என்பதும் எளிதாக சொல்லி விடக் கூடியவை.. இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா, நடைமுறையில் எளிதாக நடந்து விடக் கூடியதா என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறிதான். ஆனால் அதையும் மீறி இதெல்லாம் நடந்தால் மட்டுமே பாஜகவால் தனது கனவை கொஞ்சமாவது நனவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் அப்போதும் கூட பாஜகவை வளர்த்து விட அதிமுக, பாமக ஆகியவை மனதார முயலுமா என்பதும் மிகப் பெரிய விவாதத்துக்குரிய விஷயம்தான். நிச்சயம்காலை வாரி விடவே இவர்கள் முயல்வார்கள் என்பதையும் மறுக்க இயலாது. இதுதான் தமிழக அரசியல் கள யதார்த்தம்.