ஆச்சு... ஆச்சு.. வருஷம்தான் ஆச்சு.. அழகிரி பஞ்சாயத்து ஓயவில்லையே.. ஆதங்கத்தில் கருணாநிதி குடும்பம்
சென்னை: திமுகவில் அழகிரியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டது; கொரோனாவுக்கு பின்னர் எல்லாம் சுபமாக நடைபெறும் என மீண்டும் அழகிரி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரிமாறி வருகின்றனர். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இதுபோன்ற தகவல்கள் பரவுவதும் பின்னர் அடங்கிப் போவதும்தான் நடந்து கொண்டே இருக்கிறது தவிர உருப்படியான நிகழ்வுகள் எதும் நிகழவில்லை என்பது திமுகவினர் ஆதங்கம்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி. அழகிரியை ஒதுக்கி வைத்த நிலையில்தான் திமுகவில் மு.க.ஸ்டாலின் கை இடையூறு இல்லாமல் ஓங்கியது.
முதலமைச்சரை கடைசியாக எச்சரிக்கிறேன்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்
அழகிரி ஆவர்த்தனம்
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவுக்குள் எப்படியும் நுழைவது என்பதில் அழகிரி தரப்பு படுமுனைப்பு காட்டியது. தமக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக தனி ஆவர்த்தன முயற்சிகளையும் கூட அழகிரி தரப்பு மேற்கொண்டது. பல மாவட்டங்களில் தனியே கருணாநிதி நினைவஞ்சலி கூட்டங்களை நடத்தினார் அழகிரி.
அழகிரி தரப்பு நிபந்தனை
ஆனால் இதை கருணாநிதி குடும்பத்தினர் ரசிக்கவில்லை. இதனால் அழகிரியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. கருணாநிதி குடும்பத்தினரால் நடத்தப்படும் திமுக அறக்கட்டளைகளில் தங்களது குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்பதுதான் அழகிரி தரப்பு நிபந்தனை. இதுதான் பேச்சுவார்த்தைகளின் மையம். இந்த நிபந்தனைகளுக்கு மற்றொரு தரப்பில் பிடி கிடைக்கவில்லை.
பேசுவதும் முறிவதும் தொடர் கதை
ஆனால் திமுக தரப்பு இதில் இறங்கி வருவதாகவும் இல்லை. கருணாநிதி குடும்பத்தினர் அனைத்து தரப்புடனும் சமாதான பேச்சுகளை முன்னெடுப்பதும் ஒரு கட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை முறிவதும்தான் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது அழகிரி தரப்பில் இருந்து ரஜினி பக்கம் போகிறார்; பாஜக பக்கம் போகிறார் என திமுகவுக்கு பீதியூட்டும் தகவல்கள் பரப்பிவிடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
மீண்டும் திமுகதான்
இருப்பினும் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் எப்படியும் திமுகவில் மீண்டும் இணைந்துவிடுவோம் என்கிற அசராத நம்பிக்கையில் இருக்கின்றனர். இந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிந்துவிட்டன; கொரோனாவுக்கு பின் இணைப்பு நிகழ்ச்சி சுமூகமாக நடைபெறும் என்கிற தகவல்களை அழகிரி ஆதரவாளர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
மதுரை யார் கட்டுப்பாட்டில்?
மேலும் மதுரைக்கான மாவட்ட செயலாளர் பதவிகளில் அழகிரி பரிந்துரைத்த மன்னன் பெயரை ஏற்பதற்கு திமுக தலைமை தயக்கம் காட்டவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய ஒருவரின் பெயரை அழகிரி முன்வைக்கிறாராம். ஒட்டுமொத்தமாக மதுரை திமுகவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது அழகிரியின் எண்ணம். ஆனால் அப்படி விட்டுக் கொடுக்க முடியாது என்பது ஸ்டாலின் தரப்பு வாதம். இந்த இழுபறிதான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அழகிரி தரப்பினர்.