திமுகவை கதற விடும் முதல்வர்.. பொசுக் பொசுக்கென எழுந்து.. சுடச் சுட பதில்.. கலக்குறாரே!
சென்னை: திமுகவை கதற விடுகிறார் முதல்வர் எடப்பாடியார் என்றுதான் சொல்ல வேண்டும்.. காரணம், சட்டமன்றத்தில் அவரது செயல்பாடுகள் அந்த அளவுக்கு திரும்பி பார்க்க வைத்து வருகின்றன!
அன்று எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் இருந்தபோது சட்டமன்ற செயல்பாடுகள் பரபரப்பாக இருக்கும். காரசார விவாதங்கள் தெறிக்கும்.. எம்ஜிஆரும் கருணாநிதியும் மோதி கொள்வதை பார்த்தால் ஏதோ பகைமை தலைதூக்குவது போலவே காணப்படும்.. ஆனால் ஆழமான நட்பின் அஸ்திவாரத்தில்தான் இவர்களின் அரசியல் பிரவேசம் நகர்ந்தது!
எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா கருணாநிதிக்கு ஈடு தந்தார்.. ஒவ்வொரு தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் எடுத்து வைத்து கேள்வி எழுப்புவார்.. அதற்கு கலைஞரால் பதிலே தர முடியாதோ என்று நினைக்கும்போதுதான், ஒன்றுக்கு இரண்டு பதிலாக எடுத்து போடுவார்.. கருணாநிதி - ஜெயலலிதா இருவரில் யார் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் கேள்விகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து, சரிபார்த்துதான் எழுப்புவார்கள்.
மூத்த அமைச்சர்கள்
ஆனால் இருவருமே மறைந்த நிலையில், சட்டமன்ற நிகழ்வுகள் சூடுபிடிக்காமல் தொய்வுடன் காணப்பட்டன.. எந்த கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பினாலும், ஒருசில மூத்த அமைச்சர்கள் மட்டுமே அவைகளுக்கு பதில் தந்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை.. முதல்வர் எடப்பாடியாரே முன்னின்று பதில் சொல்கிறார். துறைவாரியான கேள்விகளை யார் எழுப்பினாலும் சரி, அந்தந்த அமைச்சர்கள் பதில் அளித்தபின்னரும் முதல்வர் தனியாக எழுந்து அவைகளுக்கு பதில் சொல்கிறார்.
விளக்கம்
கடந்த மாதம் வண்ணாரப்பேட்டை விவகாரம் தலைதூக்கிய சமயத்தில், "சிஏஏ-வால் யார் பாதிச்சிருக்காங்கன்னு சொல்லுங்க.. ஒருத்தரை காட்டுங்க.. நான் விளக்கம் சொல்றேன்" என்று சீறும்போதே திமுக வாய் திறக்கவே இல்லை.. 2 தினங்களுக்கு முன்புகூட, சும்மா இஸ்லாமியர்களை தூண்டி விட்டுட்டு இருக்காதீங்க.. தமிழ்நாட்டை டெல்லி போல மாற்றிடாதீங்க.. உண்மையை எடுத்து மக்கள்கிட்ட சொல்லுங்க என்று காட்டமாக பேசும்போது திமுக கப்சிப்தான்.
துரைமுருகன்
"எங்களை 37 எம்பிக்கள் இருக்கீங்களே... என்ன செய்யறீங்கன்னு கேள்வி கேட்டீங்களே.. இப்ப நீங்க 38 பேர் இருக்கிறீர்களே என்ன செய்யறீங்க? வேளாண் மண்டலத்தை நீங்களே பேசி வாங்க வேண்டியதுதானே" என்று அன்று முதல்வர் பேசியபோதும் திமுக சைலன்ட்..தான்! துரைமுருகன் அவையில் இருந்தும் இதற்கெல்லாம் உடனடி பதில் தெரிவிக்காதது ஆச்சரியம்!!
2 ஏக்கர் நிலம்
மதுவிலக்கு படிப்படியாக குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்களே, அது என்ன ஆனது என்று எதிர்தரப்பில் கேள்வி எழுப்பவும், இதற்கும் முதல் ஆளாக எழுந்து பதில் சொன்னார் எடப்பாடியார்.. "படிப்படியாகத்தானே செய்யமுடியும்... ஒரேயடியாக எல்லாவற்றையும் செய்திட முடியாது... அதேசமயம் கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதிலும் அரசு கவனமாக இருக்கிறது" என்றார் முதல்வர்.. அத்துடன் விடவில்லை.."நீங்களும்தான் அன்று தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன்னு சொன்னீங்க... இதுவரைக்கும் எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறீர்கள்?, எங்கே கொடுத்தீங்க" என்றதுமே திமுக தரப்பில் நிசப்தான் நிலவியது!
கண்டிப்பு
அதேசமயம் முதல்வரிடம் வெறும் கண்டிப்பு மட்டும் காணப்படவில்லை... காமெடியும் தலைதூக்குகிறது.. "கொரோனாவால் எங்களுக்கு பயமா இருக்கு, எங்களால எல்லாம் இடைத்தேர்தல்களை சும்மா சும்மா சந்திக்க முடியாது" என்று துரைமுருகன் கிண்டலாக சொல்லவும், "70 வயசுக்கு மேல இருக்கிறவங்களைதான் அது தாக்குமாம்.. உங்களுக்கு அந்த பயம் வந்துடுச்சு போல" என்று பதிலுக்கு கிண்டல் செய்தார் முதல்வர்!
காவிரி காப்பாளன்
அதுமட்டுமல்ல... கஜா புயலின் தாக்கத்தின்போது மக்களின் அதிருப்தியை சம்பாதித்த இதே முதல்வர்தான் இன்று "காவிரி காப்பாளன்' என்ற பட்டத்தை விவசாயிகள் சங்கம் சார்பாக பெற்றுள்ளார்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிராக தீர்மானம் நிறைவேற்ற திமுக எம்எல்ஏ அன்பரசன் கோரிக்கை விடுக்கவும், படக்கென எழுந்து பதிலளித்த முதல்வர், "ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை, சட்டம் தெளிவாக இயற்றப்பட்டுள்ளது" என்று அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திமுக
இப்படி, ஹைட்ரோகார்பன், சிஏஏ, என்பிஆர் என ஒவ்வொன்றையும் வைத்து அரசியல் நடத்திவருவதாக சொல்லப்பட்ட திமுக, இப்போது எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் விழித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது!