சட்டசபையில் என்ன செய்யணும்... தனித்தனியாக 'பிளான் ரெடி' செய்த திமுக.- அதிமுக எம்எல்ஏக்கள்
Recommended Video
சென்னை: அண்ணா அறிவலாயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திலும் இன்று நடந்தது இந்த கூட்டங்களில் இரு கட்சி எம்எல்ஏக்களும் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாதத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதித்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜுன் 28ம் தேதி (இன்று ) தொடங்கி ஜுலை 30ம் தேதி வரை 23 நாட்கள் நடக்க உள்ளது. மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்காக சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் துறைவாரியாக பிரச்னைகள் மற்றும் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.
இந்த சட்டசபை கூட்டத்தில் எம்எலஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்க திமுக மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் அவரவர் எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று கூட்டினார்கள்.
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை11 அளவில் சென்னை அண்ணா அறிவலாயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடிநீர் பிரச்னைகள், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காதது, 8வழிச்சாலை திட்டம், அணுக்கழிவு பிரச்னை, சட்டம் ஒழுங்கு, 7 தமிழர் விடுதலை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதேபோன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் இன்று பிற்பகல் 12 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சட்டசபை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது எந்த மாதியான பிரச்னைகளை எழுப்புவார்கள் எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடந்தது.