டுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்
போலி வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார் கவுன்சில் எச்சரித்துள்ளது
சென்னை: "யாரெல்லாம் போலி வக்கீல்களோ அவங்க ஒழுங்கா வந்து பார் கவுன்சிலில் ரிஜிஸ்தர் பண்ண சர்ட்டிபிகேட்டை திருப்பி தந்துடுங்க.. வக்கீல்கள் என்ற போர்வையில் தவறு செய்தால், பார்கவுன்சில் கடுமையான, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்.. போலி வக்கீல்களை ஒழிக்க பார் கவுன்சில் முதன்மையாக நிற்கும்" என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் விபின் என்ற 59 வயது நபர், தெற்கு ரெயில்வேயில் 'கார்டு' ஆக வேலை பார்த்து வந்தவர். இங்கு வேலை பார்த்து கொண்டே ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள எஸ்பிடிஆர்எம் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்துள்ளார்.
2015 - 2018-ம் ஆண்டு வரை படித்திருக்கிறார்.. குறைந்தபட்சம் 70 சதவீதம் அட்டன்டன்ஸ் சட்டக்கல்லூரியில் இருக்கவேண்டும் என்ற விதி உள்ள நிலையில்தான், இவர் ரெயில்வேயில் வேலை செய்துகொண்டே, காலேஜுக்கும் போகாமல், போலியான வருகை சான்றிதழை வாங்கி சமர்ப்பித்து.. பிறகு வக்கீல் படிப்பையே படித்து முடித்தார்.
மோகன்தாஸ், உலகநாதன் ஆகிய வக்கீல்களை துணைக்கு வைத்து கொண்டு, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ய அப்ளை செய்யும்போதுதான் விஷயம் வெளிப்பட்டு மாட்டிக் கொண்டார்.. இந்த வழக்கு மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, இதற்கென தனிப்படையும் அமைக்கப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டது.
அப்போதுதான், விபின் படித்த அந்த சட்ட கல்லூரி முதல்வர் ஹிமவந்தகுமார் என்பவர்தான் போலியான வருகை பதிவேடு சான்றிதழ் தந்துள்ளார் என்றும், அந்த காலேஜில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு போலியான வருகை பதிவேடு சான்றிதழ்களை தந்திருக்கிறார் என்றும் தெரியவந்தது. இப்போது கல்லூரி முதல்வர் ஹிமவந்தகுமார் கைதாகி உள்ளார்.
இவரிடம் போலியான சான்றிதழை படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்தும் உள்ளனர்.. இது சம்பந்தமான நடவடிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் இறங்கி உள்ளனர்.. இந்த சம்பவத்தின் எதிரொலியாக போலி வருகைச் சான்று அளித்து வக்கீல்களாக பதிவு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ். அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது அமல்ராஜ் சொல்லும்போது, "போலி வருகைப்பதிவு அளித்து வக்கீலாக பதிவு செய்தவர்கள், உடனே தங்கள் பதிவு சான்றை திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும்.. அப்படி ஒப்படைத்தால், அவர்கள் மீது எந்த குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படாது.. ஒருவேளை ஒப்படைக்க தவறினால் குற்ற நடவடிக்கையுடன் அவர்களின் ஓய்வூதியம், ஊதிய பலன்கள் உட்பட எல்லாமே பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேறு மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் படித்துவிட்டு, தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களின் சர்ட்டிபிகேட்டுகள் ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்படும்... தமிழகத்தில் 65 ஆயிரம் வக்கீல்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.. மீதமுள்ள வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு காலக்கெடு விதிக்கப்படும்.
வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களின் பட்டியல், பார் கவுன்சில் இணையதளத்தில் வெளியிடப்படும்.. வக்கீல்கள் என்ற போர்வையில் தவறு செய்பவர்கள் மீது பார்கவுன்சில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கும்.. போலி வழக்கறிஞர்கள் ஒழிக்க பார் கவுன்சில் முதன்மையாக நிற்கும்" என்றார்.