7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கூடாது.. தமிழக பாஜகவில் புகைச்சலை கிளப்பும் கடிதம்
சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தரக் கூடாது என தமிழக பாஜகவின் கல்விப் பிரிவு தலைவர் நந்தகுமார் வலியுறுத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது கடும் எதிர்ப்புக்குள்ளாக்கி இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் போக்கை கண்டித்து போராட்டம் நடத்தின.
தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் கூட, ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொண்டது போதும்; இந்த மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். தமிழக பாஜக தலைவர்கள் இந்த குரலிலேயே பேசிவந்தனர்.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் கல்விப் பிரிவு தலைவர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரக் கூடாது என வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் நீதிமன்றத்துக்குப் போய் தடையாணை பெறுவோம் என்றும் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதம் எழுதியுள்ள நந்தகுமார், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
தமிழக பாஜகவின் தலைவர்கள் தொடர்ந்து 7.5% இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கும் நிலையில் அதேகட்சியில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது புதிய சர்ச்சையாகி வெடித்திருக்கிறது. சொந்த கருத்தா இருக்கலாம்!