எல்லாரும் நமக்கு வேணும்.. முகத்தை மாத்தணும்.. அதிரடியாக களம் இறங்குவோம்.. பாஜக அலேக் திட்டம்
சாதீய அரசியலை பாஜக கையில் எடுக்க போவதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: இப்ப இருக்கிற இந்த சாதீய- மதவாத முகத்திரையை கிழித்துவிட்டு, புதிய பொலிவுடன் அடி எடுத்து வைக்க பாஜக யோசித்து வருகிறது. அதாவது அனைத்து சாதியினரையும் அரவணைக்கும் வகையில் தன் முகத்தை மாற்றப் போகிறதாம் பாஜக.
அதாவது, பாஜக என்றால் பிராமணர்களுக்கான கட்சி, நாடார் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி, கவுண்டர் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி என்ற பெயர்தான் உள்ளது. இதைத் தாண்டி வேறு சமூகத்தினர் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.
ஆர்எஸ்எஸ் - பிராமணர் ஆதரவு கட்சியாகவே இது பார்க்கப்படுகிறதே தவிர தமிழகத்தில் இந்தக் கட்சியை யாரும் தேசியக் கட்சியாக பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அங்கீகாரம் கூட இந்த விஷயத்தில் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை. இதை உடைக்கும் வேலையில் இறங்குமாறு பாஜக மேலிடம் தமிழக பிரிவை வலியுறுத்தியுள்ளதாம்.
பாஜக பிளஸ்
அதனால் சாதீய ரீதியாக அனைவரையும் அரவணைக்கும் வகையில் இதில் இறங்க உள்ளது. இப்போதைக்கு கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கவுண்டர் சமுதாயத்து ஓட்டுகள் எடப்பாடியிடம் உள்ளது. இது பாஜகவுக்கு ஒரு பிளஸ். அதேபோல, வன்னியர் சமுதாயத்து வாக்குகள் பாமகவிடம் இருக்கிறது. இதுவும் பாஜகவுக்கு ஒரு பிளஸ். ஏனென்றால், அதிமுக கூட்டணியில்தான் பாமகவும் உள்ளது. இதைதவிர, முக்குலத்தோர் வாக்குகள் தினகரன் பக்கம் இருப்பதால், சசிகலாவை வைத்து, அதையும் வளைத்து போட பாஜக பிளான் போட்டு வருகிறது.
சசிகலா
இதில் தினகரனிடம் பேசுவதும், சசிகலாவை வெளியே கொண்டு வருவதும் என வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. சசிகலா மட்டும் அதிமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டால், கவுண்டர்கள், முக்குலத்தோர், வன்னியர் என பெரும்பாலான தமிழகம் பாஜக பக்கம் இருப்பதுபோல தென்படும். இது எல்லாவற்றையும்விட இருக்கவே இருக்கிறது தேமுதிக.. எப்பவுமே ஆதரவு கட்சிதான்.
முக்குலத்தோர்
தற்போது பாஜகவின் முழுக் கவனம் வன்னியர்களின் வாக்குகள் மட்டுமல்லாமல் தலித் சமுதாயத்தினரின் வாக்குகளையும் அது முக்கியமாக பார்க்கிறது. காரணம், தலித் சமுதாயத்தினர் மத்தியில் திமுக ஆதரவு நிலை இல்லை என்பதால், அதை தனக்கு சாதகமாக வளைக்க பாஜக முயலுகிறது. முக்குலத்தோர் மத்தியில் கட்சியை கொண்டு செல்ல ஓ.பி.எஸ் உள்ளிட்டோரின் ஆதரவு இன்னும் தீவிரமாகவே கையில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சாதி
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யாரையும் இதுவரை நியமிக்காமல் இருக்க ஜாதி ரீதியான இந்த மேட்டரே முக்கியக் காரணம் என்கிறார்கள். மூத்த தலைவர் கல்யாண ராமன் வன்னியர். அவர் தனக்கு தலைவர் பதவி தருமாறும், தந்தால் தனது சமுதாயத்திலிருந்து பல முக்கியஸ்தர்களை கட்சிக்கு கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் தலைவர் பதவியைத் தர மேலிடம் விரும்பவில்லையாம். அதேசமயம், அவரது ஐடியா மேலிடத்திற்குப் பிடித்துள்ளதாம். எனவே அவரை வேறு விதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாம்.
பாஜக முகம்
இந்த நிலையில் தலைவர் பதவியில் வன்னியர் அல்லது தலித் அல்லது முக்குலத்தோர் இவர்களில் ஒருவரை நியமிக்கும் ஐடியாவில் பாஜக மேலிடம் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது தமிழக பாஜக தலைவர் நியமனத்தில் இருந்தே, அக்கட்சியின் முகம் வேறு மாதிரியாக பிரதிபலிக்க போகும் என தெரிகிறது. எப்படி பார்த்தாலும், சாதியை கையில் எடுக்காமல் தமிழகத்தில் ஒன்றும் வேலைக்காகாது என்பதை மட்டும் பாஜக தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது.. அதேசமயம், பாஜக என்ற முகமே மக்கள் மத்தியில் வேறு மாதிரியாக பதிந்து போயிருப்பதால் அதை சரி செய்யாமல் ஜாதிகளை வளைத்தால் எந்த அளவுக்கு அது பயன் தரும் என்பதும் கேள்விக்குறியே.