காவிரி நதிநீர் விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் முருகனின் 5 சுளீர் கேள்விகள்!
சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜகவின் தமிழக தலைவர் முருகன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையமானது மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஆனால் தமிழக அரசு, எந்த ஒரு பாதிப்பும் தமிழகத்துக்கு இல்லை என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 5 கேள்விகளுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1. 50 ஆண்டுகால காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை முதன்முதலில் புதுப்பிக்கத் தவறியது யார்?
2. 1974 ஆம் ஆண்டு மாநில முதல்வரின் பேச்சுவார்த்தையில், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் அவர்களை கேட்காமலே தமிழ்நாட்டின் 100 டிஎம்சி தண்ணீர் உரிமையை விட்டுக் கொடுத்தது யார்?
3. 2004 - 2013 வரை மத்திய அரசில் அங்கம் வகித்து கூட காவேரி பிரச்சனையை தீர்க்காதது யார்?
4. கர்நாடகாவில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட பெற்றுத் தராது யார்?
5. கூட்டாட்சி தத்துவம் மாநில உரிமை என பேசும் ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை வைக்கும் அரசியல் சட்ட 356 பிரிவை அதிகம் பிரயோகித்த காங்கிரஸ் கட்சி, குறிப்பாக திமுக மீதே 2 முறை பிரயோகித்தும், அவர்களோடு தொடர்ந்து சந்தர்ப்பவாத கூட்டு வைத்திருப்பது, முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே திமுக?
இவ்வாறு முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.