அன்புள்ள மருத்துவருக்கு.. 50 காசு போஸ்ட் கார்டில் வந்த கடிதம்.. நெகிழ்ந்து போன தமிழிசை
சென்னை: அன்புள்ள மருத்துவருக்கு.. என 50காசு போஸ்ட் கார்டில் புதுக்கோட்டை மாணவர்கள் அனுப்பிய கடிதத்தால் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நெகிழ்ச்சி அடைந்தார்
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் ஆவார். கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் மருத்துவ பணியில் இருந்து அவர் ஒதுங்கி உள்ளார்.
எனினும் அவ்வப்போது தான் போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மக்களின் கோரிக்கையை ஏற்று இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தேசிய மருத்துவர் தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், அனுமார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவ தின வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்கள். 50 காசு போஸ்ட் கார்டில் வந்த வாழ்த்து செய்தியை பார்த்து தமிழிசை சவுந்திரராஜன் நெகிழ்ந்து போனார்.
புதுக்கோட்டை மாவட்டம் ,கறம்பக்குடி ஒன்றியம், அனுமார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளின் மருத்துவ தின வாழ்த்து செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும்,பாராட்டுகளும்... pic.twitter.com/z7Y8eMVWdt
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 1, 2019
இதனை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன், மாணவர்களின் கடிதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்றும் பதிவிட்டுள்ளார்.