அறநிலையத்துறையில் இந்து சமயம் பெயரை நீக்க சொல்வது ஹிந்துக்களை பிளவுபடுத்தும் சதி.. பாஜக கொந்தளிப்பு
சென்னை: தமிழக அரசின் அறநிலையத்துறையில் இந்து சமயம் என்ற பெயரை நீக்க சொல்வது ஹிந்துக்களை பிளவுபடுத்தும் சதி என்று தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் சைவர்களாக, வைணவர்களாக இருந்தனர்; ஆங்கிலேயர்கள் காலத்துக்கு பின்னரே இந்துக்கள் என அடையாளப்படுத்தப்பட்டனர் என்பது திராவிட, தமிழ்த் தேசிய இயக்கத்தினர் வாதம். இதனை பாஜக மிக கடுமையாக எதிர்த்து வருகிறது.
தமிழர்கள் இந்துக்கள் இல்லை- சைவர்கள்; வீர சைவர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கர்நாடகாவில் லிங்காயத்துகள் நாங்கள் இந்துக்கள் இல்லை; எங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்தினர்.
இந்து இல்லாம, ராஜராஜ சோழன் முஸ்லிமா,கிறிஸ்தவரா? வெற்றிமாறன் எப்படி சொல்லலாம் -இயக்குநர் பேரரசு கோபம்
வெற்றிமாறன் பேச்சு
அண்மையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன், ராஜராஜ சோழ மன்னரை இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என பேசியது பெரும் சர்ச்சையும் விவாதமுமானது. ராஜராஜ சோழன் சைவர்தான்; அவர் இந்து அல்ல; இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் சூட்டியது என சீமான், திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டினர். ஆனால் பாஜகவின் எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இதனை கடுமையாக எதிர்த்தனர்.
சீமான் கருத்து
இது தொடர்பாக சீமான் கூறுகையில், புகழ்பெற்ற தமிழர் அடையாளம் அத்தனையையும் ஆரியம் தனதாக்கி கொள்ளும். நமது சிவனை, முருகனை ஆரியம் தனதாக்கி கொண்டது. ராஜராஜ சோழனையும் இந்து என்று தன்வயப்படுத்திக்கொள்ள ஆரியம் முயல்கிறது. இதனை அனுமதிக்காதீர் என்கிறார் வெற்றிமாறன்.. இதனை ஏற்கிறேன் என்றார்.
திருமாவளவனின் புதிய கோரிக்கை
இந்த நிலையில் தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், இந்து சமய அறநிலைத்துறையை சைவ சமய அறநிலைத்துறை என்றும் வைணவ சமய அறநிலைத்துறை என்றும் பெயர் மாற்ற வேண்டும் என கோரியுள்ளார். தமிழகத்தில் ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் இந்த கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக கடும் எதிர்ப்பு
ஆனால் திருமாவளவனின் இந்த கோரிக்கை தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், அதாவது ஹிந்துக்கள் ஒற்றுமையாய் இருக்கக்கூடாது, பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்தின் முதற்கட்ட கோரிக்கை. அப்படியே ஜாதிகள் இனி இல்லை. இந்தியாவில் இனி சைவ சமயம், வைணவ சமயம் மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்த மதமும் கூடாது என்றும் கோரிக்கை வைப்பீர்களா? என கேள்வி கேட்டுள்ளார்.