இது லிஸ்ட்டுலேயே இல்லையே.. பாஜக எடுத்த அதிரடி ஆயுதம்.. தலித் முருகனை தலைவராக்கி.. என்ன பிளான்?
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை: அப்ப்ப்பாடா... ஒருவழியாக தமிழக பாஜகவுக்கு தலைமையை அறிவித்துவிட்டது மேலிடம்.. இப்ப இருக்கிற இந்த சாதீய- மதவாத முகத்திரையை கிழித்துவிட்டு, புதிய பொலிவுடன் அடி எடுத்து வைத்துள்ளது பாஜக.. ஆம்.. தலித் ஒருவரை தமிழக பாஜக தலைவராக நியமித்து.. அனைத்து சாதியினரையும் அரவணைக்கும் வகையில் தன் முகத்தை மாற்றும் முயற்சியில் இறங்கி.. தலித் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
Recommended Video
பாஜக என்றால் பிராமணர்களுக்கான கட்சி, நாடார் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி, கவுண்டர் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி என்ற பெயர்தான் உள்ளது. இதைத் தாண்டி வேறு சமூகத்தினர் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.
இன்னும் ஓபனாக சொல்லபோனால், ஆர்எஸ்எஸ் - பிராமணர் ஆதரவு கட்சியாகவே இது பார்க்கப்படுகிறதே தவிர தமிழகத்தில் இந்தக் கட்சியை யாரும் தேசியக் கட்சியாக பார்க்கவில்லை... காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அங்கீகாரம் கூட இந்த விஷயத்தில் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை... அதனால்தான் இதை உடைக்கும் வேலையில் இறங்குமாறு பாஜக மேலிடம் எற்கனவே தமிழக பிரிவை வலியுறுத்தி வந்தது.
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம்
தேசிய கட்சி
இப்போதைக்கு பாஜக கூட்டணியில் உள்ளவை அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள்தான்.. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கவுண்டர் சமுதாயத்து ஓட்டுகள் எடப்பாடியிடம் உள்ளது. இது பாஜகவுக்கு ஒரு பிளஸ். அதேபோல, வன்னியர் சமுதாயத்து வாக்குகள் பாமகவிடம் இருக்கிறது. இதுவும் பாஜகவுக்கு ஒரு பிளஸ். இதைதவிர, முக்குலத்தோர் வாக்குகள் தினகரன் பக்கம் இருப்பதால், சசிகலாவை வைத்து, அதையும் வளைத்து போட பாஜக பிளான் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
வாக்குக்கு குறி
இதெல்லாம் இருந்தாலும் பாஜகவின் முழுகவனம் தலித் சமுதாயத்தினரின் வாக்குகளைதான் குறி வைத்தபடி இருந்தது... இதற்கு காரணம், தலித் சமுதாயத்தினர் மத்தியில் திமுக ஆதரவு நிலை இல்லை என்பதால், அதை தனக்கு சாதகமாக வளைக்க பாஜக முயன்றது... அதனால்தான் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யாரையும் இதுவரை நியமிக்காமல் இருக்க ஜாதி ரீதியான இந்த மேட்டரே முக்கியக் காரணம் என்றும் சலசலக்கப்பட்டது.
டாக்டர் கிருபாநிதி
இப்போது ஒரு தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை தமிழக பாஜக தலைவராக அறிவித்துள்ளது மேலிடம்.. ஏற்கனவே டாக்டர் கிருபாநிதி தலித் தலைவராக இருந்தவர்.. கடந்த 2000-ம் ஆண்டில் பாஜகவின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்... இவர் தான் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழக பாஜக தலைவரும் ஆவார்.. அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.
தமிழிசை சவுந்தராஜன்
ஆனால் பதவியேற்ற சில வருடங்களிலேயே கிருபாநிதிக்கும் அப்போதைய மாநில செயலாளராக இருந்த இல.கணேசனுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதற்கு பிறகு தலித் யாரும் நியமிக்கப்படவில்லை.. ஆனால் அதற்கு பிறகு பதவி வகித்த தலைவர்களில், தமிழிசை சவுந்தராஜன் மாநில பாஜகவின் வளர்ச்சியில் பெருமளவு கவனம் செலுத்தினார்.. உண்மையை சொல்வதானால் தமிழிசை இல்லையென்றால் தமிழகத்தில் இந்த அளவுக்குகூட பாஜக வளர்ச்சி பெற்றிருக்காது.
எச்.ராஜா
ஆனால் இவருக்கு பிறகு யாரை நியமிப்பது என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.. இந்த பதவிக்கு எச்.ராஜா பெயர் முதல் ரஜினிகாந்த் பெயர் வரை அடிபட்டது.. ஆனால் மாநில தலைமைக்கு அதிரடி மட்டும் போதாது.. நிதானமாக அணுகும் பக்குவமும் தேவை என்பதால் எடுத்த எடுப்பிலேயே எச்.ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்களாம்... ஆனால், தமிழகத்தில் பாஜக தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற தோற்றம் உள்ளதால், அதை மாற்றவே தலித் ஒருவர் பாஜக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக யோசித்தது..
அமித்ஷா
ஏனென்றால், தேசிய அளவில் பாஜக முதன்மை கட்சியாக... ஏகப்பட்ட மாநிலங்களில் தேர்தல் வெற்றிகளைக் குவித்தாலும் தென் மாநிலங்களில் அதுவும் தமிழகத்தில் இன்னும் 3 சதவீத வாக்கு வங்கியை தாண்ட முடியாமல் இருப்பதுதான் அதன் நிலைமையே.. இதை அமித்ஷா, மோடி முதல் யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை.
பாஜக தலைவர்
தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாததற்கு திராவிட அரசியல், அதிமுக, திமுக ஆகிய இரு மாநில கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை காரணம் என்பதை மெதுவாகத்தான் பாஜக மேலிடம் புரிந்து கொண்டது.. திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் தம்மால் ஒரு இம்மியளவுகூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தையும் உணர்ந்து கொண்டது.. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை ஈர்க்கும் வகையில் மாநில தலைமை தேவை என்ற அவசியத்தையும் தெரிந்து கொண்டது.. அதனால்தான் தமிழக பாஜக தலைவர் நியமனத்தில் இவ்வளவு தயக்கம் காட்டி... காலம் தாழ்த்தி.. தலித் வாக்குகளுக்கு குறி வைத்து.. எல்.முருகனை தலைவராக அறிவித்துள்ளது.
யார் இவர்?
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்தான் எல். முருகன். இவர் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இது மத்திய இணை அமைச்சர் பதவிக்கு நிகரானதாகும்... எல். முருகன் தமிழகத்தில் அதிகம் அறியப்படாத ஒருவர். இவரது நியமனம் பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அதை விட முக்கியமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவர் யார்னே தெரியலயே இவரை வைத்து எப்படி தமிழக பாஜக மிகப் பெரிய சவால்களை சந்திக்கப் போகிறது என்பதே கேள்வியாக உள்ளது.
கொங்கு பெல்ட்
முருகனை மட்டும் நாம் இங்கு பார்க்க முடியாது. முருகன் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை மொத்தமாக திரட்டும் உத்தியே இது... ஆனால் இது எந்த அளவுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை. குறிப்பாக கொங்கு பெல்ட்டில் பாஜகவின் இந்த முடிவுக்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று இப்போதே சொல்லி விடலாம். அதேபோலத்தான் பிற பகுதிகளிலும் கூட பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எப்படிப்பட்ட ஆதரவு கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு கணக்கை வைத்துத்தான் முருகனை தமிழக தலைவராக அமித்ஷா நியமித்திருக்கலாம் என்று மட்டும் தெரிகிறது. அது என்ன ரகசியம் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
திருவிளையாடல்
தமிழிசை நியமிக்கப்பட்டபோதும் கூட இப்படித்தான் தமிழக பாஜகவில் பலரும் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். குறிப்பாக எச். ராஜா போன்றோர்... இப்போதும் அதே மாதிரியான அதிர்ச்சி.. அதிர்ச்சி என்பதை விட பேரதிர்ச்சியில் அவர்கள் மூழ்கியுள்ளனர். இருப்பினும் முருகனை வைத்து பாஜக என்ன மாதிரியான திருவிளையாடலை நடத்தப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி விட்டுள்ளது. முருகன் மூலம் தாமரை மலருமா?!!