வேளாண் மசோதாவை எதிர்த்து போராடுவது தேச நலனுக்கு எதிரானது.. தமிழக பாஜக தலைவர் முருகன்
சென்னை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுவது தேசநலனுக்கு எதிரானது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் எல். முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் ஆன்லைனிலேயே விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும். உலக அளவில் இன்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
என்னைப் போன்ற விவசாயிகளுக்குத்தான் இதன் கஷ்டங்கள் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்கு (ஸ்டாலின்) விவசாயம் என்றால் என்ன என்று தெரியாது. தக்காளிக்கு விலை கிடைக்காமல் கீழே கொட்டும்போது விவசாயி என்ன வேதனையை அனுபவிக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு இது எல்லாம் தெரியாது. ஒப்பந்தங்கள் போட்டுவிட்டால் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட விலையை நிறுவனங்கள் கொடுக்கத்தான் வேண்டும். இதற்குதான் இப்போது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகள் காலம் காலமாக வைத்திருக்கும் கோரிக்கை. அதுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விலை கிடைக்க கவனிக்க வேண்டிய 3 அம்சங்கள்.. வேளாண் மசோதா குறித்து ககன்தீப் சிங் பேடி முக்கிய தகவல்
விவசாய மசோதாக்களை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மக்களை குழப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் வேளாண் மசோதா தொடர்பாக திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்ச விலை என்பது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு முருகன் கூறினார்.