அந்த பயம் இருக்கணும்.. பகலில் மிரட்டிய ஸ்டாலினுக்கு.. ராத்திரியில் பதிலடி கொடுத்த பாஜக!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக பதிலடி தந்துள்ளது
சென்னை: "விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர் முக ஸ்டாலின்.. இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும்" என்று திமுக தலைவருக்கு தமிழக பாஜக ட்வீட் போட்டு பதிலடி தந்துள்ளது.
திமுகவை பொறுத்தவரை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முழக்கங்களை முன்வைத்துதான் அதன் ஆரம்ப அரசியல் நகர்ந்தது.
ஆனால், கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற சிறுபான்மையின மக்களின் விழாக்களுக்கு மட்டும் திமுக வாழ்த்து சொல்லி வரும்.. அதே சமயம் இந்துக்கள் கொண்டாடும் எந்த ஒரு பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வதில்லை என்ற நிலைப்பாட்டையும் அது கடைப்பிடித்து வருகிறது.
இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை?
|
கோபாலபுரம்
இந்நிலையில் கடந்த 2014ம் வருடம் ஆகஸ்ட் 29-ம் தேதி, திமுகவின் பொருளாளராக இருந்த முக ஸ்டாலின், திடீரென விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.. ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலேயே இந்த பதிவு போடப்பட்டிருந்தது.. "Greetings to all on the occasion of Vinayaka Chaturthi!" என்று ஸ்டாலின் பதிவிடவும், அது மிகபெரிய அதிர்வலையை அப்போது ஏற்படுத்தியது.. கோபாலபுரமே அதிர்ந்தது.. கலைஞர் கருணாநிதியும் இதனால் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
இதனால் அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டும் விட்டது. "மு.க.ஸ்டாலினின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதி காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று மறுப்பும் வெளியிட்டது.. இந்த செய்தியும் அன்றைய சோஷியல் மீடியாவில் பரபரப்பாகி, சில இந்துக்களின் அதிருப்திக்கும் திமுக ஆளானது நினைவிருக்கலாம்.
சர்ச்சை பதிவு
இந்த சம்பவத்தை இப்போது தமிழக பாஜக நினைவுபடுத்தி உள்ளது.. நேற்று தந்தை பெரியாரின் நினைவுநாளுக்கு பாஜக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான பதிவு ஒன்றினை போட, உடனே அதை பாஜக நீக்கிவிட்டது.. எனினும், இந்த பதிவிற்கு முதல் ஆளாக வந்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். "அந்த பயம் இருக்கட்டும்.. மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!" என்று ஸ்டாலின் காட்டமாகவே தெரிவித்திருந்தது மிக முக்கியமான பதிவாக பார்க்கப்பட்டது.
பயம் இருக்கணும்
இதனால், முக ஸ்டாலினுக்கு பாஜக இன்று பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளது.. "விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், பயம் பற்றி அந்த பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும் @mkstalin" என்று பாஜக தெரிவித்துள்ளது.
பதிலடி
"அந்த பயம் இருக்கணும்" என்று பாஜகவை பார்த்து நேற்று ஸ்டாலினும் சொன்னார்.. ஸ்டாலினை பார்த்து பாஜகவும் இன்று சொல்கிறது என்றாலும், முக ஸ்டாலின் அன்று பதிவை நீக்கியது இந்துக்கள் மீதான பயத்தில் இல்லை.. அக்கட்சியின் கொள்கை, நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஆனாலும் பாஜக உடனே ஸ்டாலின் ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்திருப்பது கவனிப்புக்குரியதே.