என்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது!- தமிழக பாஜக கூத்து!
சென்னை: திமுகவுடனான மோதலை முன்வைத்து தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய ஒரு பெருங்கூத்துதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை நங்கநல்லூரில் திமுகவினரின் சுவர் எழுத்துகளை பாஜகவின் மகளிர் அணி நிர்வாகிகள் சுண்ணாம்பு பூசி அழித்தனர். இந்த சுண்ணாம்பு பூசி அழிப்பதை மாறி மாறி செல்பியாக எடுத்தும் பாஜகவினர் மகிழ்ந்தனர்.
இதனால் கடுப்பாகிப் போன திமுகவினர் பாஜகவினருடன் மல்லுக்கட்டினர். இந்த மோதல்களால் நங்கநல்லூரில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுகவினரைக் கண்டித்து சென்னை நங்கநல்லூரில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
தடாலடி பேச்சுகள்
இந்தப் போராட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகிகள் பலரும், இது பாஜக 2.0; இனியும் பொறுமையாக இருக்கமாட்டோம்.. எங்கள் மீது கை வைத்தால் உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றெல்லாம் பாஜக மகளிர் அணியினரே பகிரங்க மிரட்டல் விடுத்ததும் நடந்தேறியது.
|
காயங்களுடன் போட்டோக்கள்
அப்போது, திடீரென பாஜக நிர்வாகிகள் சிலர் கைகளில் கட்டுப் போட்ட நிலையில் காட்சி தந்தனர். மகளிரணி நிர்வாகி சுமதி வெங்கடேஷ் என்பவர் தலையிலும் கட்டுடன் காட்சி தந்தார். இது தொடர்பாக படங்களைப் பகிர்ந்த சுமதி வெங்கடேஷ், இதுபோன்ற முயற்சிகளால் எந்தவித பலனையும் அவர்கள் அடையப் போவதில்லை. திமுகவின் அராஜகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எங்களது கடமை என கொந்தளித்திருந்தார்.
கிண்டலுக்குள்ளான காயங்கள்
ஆனால் இந்த காய கட்டுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டன. ஏனெனில் காயகட்டுகளில் இருந்த ரத்தம் ஒரே மாதிரியாக காவி நிறத்தில் இருந்தது; இது பொய்யான காய கட்டுகள் என்பது அம்பலமானது. இதனை முன்வைத்து கடும் விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இப்படியா இருப்பீங்க?
"ரத்தம் சொட்டச் சொட்ட நிற்கிறார்கள். வருத்தப்படத் தேவையில்லை. அவர்களுக்காக அழுகத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழ் சமூக வலைதளங்களின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சக மனிதன் மீதான வன்முறையைக் கொண்டாடும் மனநிலையில் தான் நாம் உரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை" என்றெல்லாம் கூட பாஜகவினர் கொந்தளித்தனர்.
|
வெறும் போராட்டம்தான்...
இதனிடையே மறுநாளே நிகழ்ச்சிகளில் சுமதி வெங்கடேஷ் எந்த ஒரு கட்டும் இல்லாமல் கலந்து கொண்டார். இதனையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனையடுத்து "நேற்று திமுக அராஜகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகள் அனைவரும் திமுகவின் அராஜகத்தை மக்களிடம் எடுத்துக் காட்டும் விதமாக கை மற்றும் தலையில் கட்டு அணிவித்து போராட்டம் நடத்தினோம். இதை சில நபர்கள் தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்." என ஒரு பதிவு போட்டு விளக்கம் தந்திருக்கிறார்.
அப்புறம் என்ன நெட்டிசன்ஸ் அதகளம்தான்!