ஸ்டாலின் பற்றி ஒரு கருத்து.. பாஜகவில் மோதிக்கொள்ளும் 2 முக்கிய தலைகள்.. உருவானது கோஷ்டி மோதல்!
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கருத்து காரணமாக தற்போது பாஜகவில் மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் மற்றும் மாநில துணை தலைவர் அரசகுமார் இடையே சண்டை வந்துள்ளது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கருத்து காரணமாக தற்போது பாஜகவில் மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் மற்றும் மாநில துணை தலைவர் அரசகுமார் இடையே சண்டை வந்துள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழா திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார், கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று குறிப்பிட்டார்.
என்ன சலசலப்பு
பாஜகவில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது . இவரின் பேச்சுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இவர் பாஜகவின் தேசிய தலைமைக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார் பேசியது தவறு. அவரின் இந்த பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறி உள்ளது.
தேசிய தலைமை
அவர் மீது தேசிய தலைமைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைமை அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும். தேசிய தலைமை இதில் முடிவு எடுக்கும் வரை அரசகுமார் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்சிகளிலும் பங்கேற்க கூடாது, என்று குறிப்பிட்டார்.
மாநில தலைவர்
இதற்கு தற்போது மாநில துணை தலைவர் அரசகுமார் அளித்துள்ள பதிலில்,ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று அரசியல் நாகரீகம் கருதி குறிப்பிட்டேன். அதை பற்றி நான் கட்சிக்கு விளக்கம் அளித்துவிட்டேன். இது தொடார்பாக பாஜகவின் தமிழ் மாநில பொறுப்பாளர் முரளிதர ராவிடம் விளக்கம் அளித்துவிட்டேன். அவரிடம் விளக்க கடிதம் அளித்துவிட்டேன்.
பதில் சொல்ல முடியாது
கட்சியில் வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. என்னை நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் கூறுகிறார். அப்படி சொல்ல அவர் யார். என் மீது தடை போடுவதற்கு அவருக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது, என்று குறிப்பிட்டுள்ளார்.
கோஷ்டி மோதல்
ஸ்டாலின் காரணமாக தற்போது பாஜகவில் புதிய கோஷ்டி மோதல் உருவாகி உள்ளது. ஏற்கனவே சிபி ராதாகிருஷ்ணன் ஸ்டாலினை புகழ்ந்து பேசி பாஜகவில் சர்ச்சையில் சிக்கினார். தற்போது அவரை தொடர்ந்து நரேந்திரன் அரசகுமார் இடையே சண்டை வந்துள்ளது.