என்ன இப்படி செய்துவிட்டாரே?.. அரசகுமாரின் அதிரடியால் ஷாக்கான பாஜக.. கேள்வி கேட்கும் தேசிய தலைமை!
பாஜவின் மாநில துணை தலைவராக இருந்த அரசகுமார் கட்சியை விட்டு விலகிவிட்டு தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
சென்னை: பாஜவின் மாநில துணை தலைவராக இருந்த அரசகுமார் கட்சியை விட்டு விலகிவிட்டு தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். பாஜகவின் மூத்த உறுப்பினர்களை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசக்குமார், கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.
ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்.. பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் அரசகுமார்
ஸ்டாலின் வருவார்
தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜவின் பலர் இவரின் பேச்சுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
பாஜக பேச்சு
அவரின் இந்த பேச்சு பாஜகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக உறுப்பினர்கள் பலர் அவருக்கு எதிராக இணையத்திலும், டிவிட்டரிலும் குரல் கொடுத்தனர். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் பாஜகவின் தேசிய தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
என்ன மோசம்
இதனால் பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் அரசகுமாருக்கு எதிராக தேசிய தலைமைக்கு கடிதம் எழுதினார் . அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவரை பாஜக கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்றும் புகாரில் குறிப்பிட்டார்.
இல்லை
இந்த நிலையில் பாஜகவின் மாநில துணை தலைவராக இருந்த அரசகுமார் கட்சியை விட்டு விலகிவிட்டு தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஸ்டாலின் முதல்வராக வேண்டும், நான் அவருக்காக உழைப்பேன். திமுகவின் உண்மையான தொண்டனாக இருப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சி
இதற்கு முன் திமுகவில் இருந்தவர்தான் அரசகுமார். அதேபோல் இவரின் குடும்பத்தினரும் திமுக உறுப்பினர்கள்தான். பாஜகவின் வளர்ச்சி காரணமாக அதில் இவர் இணைந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்காக இவர் தீவிரமாக பணியாற்றினார். கட்சியிலும் இவருக்கு மாநில துணை தலைவர் என்ற முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் என்ன
அதேபோல் டெல்டா மாவட்டங்களில் பாஜகவிற்கு இவர் முகமாக காணப்பட்டார். திமுகவில் இருந்ததால், அவர்களின் தொண்டர்கள் பலர் இவருடன் பாஜகவில் அப்படியே இணைந்தனர். இது அங்கு பாஜகவை கொஞ்சம் வலிமை அடைய செய்தது. ஆனால் தற்போது இவர் மீண்டும் திமுகவில் இணைத்துள்ளார்.
பாஜக மோசம்
இதனால் பாஜக கட்சி தமிழகத்தில் மிக முக்கியமான முகத்தை இழந்து இருக்கிறது. அதிக தொண்டர் படை கொண்ட ஒருவரை டெல்டாவில் அக்கட்சி இழந்துள்ளது. இதனால் பாஜகவின் மூத்த உறுப்பினர்களை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஏன் இப்படி
அரசகுமாருக்கு எதிராக பாஜகவின் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் வைத்ததுதான் இதற்கு காரணம். கொஞ்சம் நேர்த்தியான முறையில் இந்த பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும். ஆனால் அதை பாஜக தமிழக உறுப்பினர்கள் செய்யாமல் விட்டுவிட்டனர் என்று தேசிய தலைமைக்கு புகார் சென்றுள்ளது.
எப்படி சமாளிப்பார்
தமிழக பாஜகவில் நிலவும் கோஷ்டி மோதல் குறித்து சென்னை வந்த போதே தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா எச்சரிக்கை விடுத்து இருந்தார் .தற்போது அரசகுமாரின் விலகல் அவரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக அவர் தமிழக பாஜக தலைவர்களிடம் விளக்கம் கேட்க உள்ளார் என்கிறார்கள்.