ஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக!
இந்தியில் திமுகவின் போஸ்டர்களை குறிப்பிட்டு தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது
Recommended Video
சென்னை: இது எப்போ, எதுக்காக அடிச்சி ஒட்டின போஸ்டர்கள் என்றே தெரியவில்லை.. திமுகவின் ஒரு பழைய போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக, "ஓட்டு தேவைக்கு மட்டும் ஹிந்தி தேவையா" என்பது போல முக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற கருத்தினை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
இதற்கு முதல் நபராக வந்து பதிவு போட்டு கண்டித்தது திமுக தலைவர் ஸ்டாலின்தான். மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும். இந்த கருத்தினை அமித்ஷா மறுபரிசீனை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி, இது இந்தியாவா 'இந்தி'யாவா என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக கட்சி திமுகவுக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறது. அது ஒரு பழைய போஸ்டர் போல தெரிகிறது. ஸ்டாலினின் போட்டோ போஸ்டரில் உள்ளது. கூடவே ஹிந்தி மொழியில் சில வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. முன்பு சென்னையில் ஒட்டப்பட்ட தேர்தல் பிரச்சார போஸ்டராக இது இருக்கக் கூடும்.
ஓட்டு தேவைக்கு மட்டும் ஹிந்தி தொடர்பு மொழியாக இருக்கலாமா?
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 20, 2019
அரசுபள்ளி மாணவர்கள் மட்டும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்கோ, வியாபாரம் பெருக்கவோ ஹிந்தி தொடர்பு மொழியாக பயன்படுத்த தடைவிதிப்பது இரட்டை நிலை அராஜகம்.
முதலில் ஓட்டு அரசியலில் ஹிந்தி திணிப்பை தடை செய்ய முடியுமா @mkstalin ? pic.twitter.com/rnE1mDMO2e
இந்த போஸ்டரை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓட்டு தேவைக்கு மட்டும் ஹிந்தி தொடர்பு மொழியாக இருக்கலாமா? அரசுபள்ளி மாணவர்கள் மட்டும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்கோ, வியாபாரம் பெருக்கவோ ஹிந்தி தொடர்பு மொழியாக பயன்படுத்த தடைவிதிப்பது இரட்டை நிலை அராஜகம். முதலில் ஓட்டு அரசியலில் ஹிந்தி திணிப்பை தடை செய்ய முடியுமா" என்று பதிவிடப்பட்டுள்ளது.
எப்பப்ப இந்த இந்திப் பஞ்சாயத்து முடிவுக்கு வரும்..!