எனக்கு கொரோனா அறிகுறி.. கந்த சஷ்டி புத்தகத்தோடு தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.. நயினார் நாகேந்திரன்
சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போன நயினார் நாகேந்திரனுக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. மாநில தலைவர் பதவிக்கான பெயர்களில் அவரது பெயரும் பிரதானமாக அடிபட்டது.
விடாமல் தலைவர்களைத் துரத்தும் கொரோனா.. கார்த்தி சிதம்பரத்தையும் தொற்றியது.. வீட்டுத் தனிமையில்!
அதிருப்தியில் நயினார் நாகேந்திரன்
ஆனால் திடீரென முருகன், பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதில் நயினார் நாகேந்திரன் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின.
கட்சி தாவும் நயினார்?
இதனையடுத்து நயினார் நாகேந்திரன் கட்சி தாவப் போவதாக செய்திகள் வெளியாகின. நயினார் நாகேந்திரனை திமுக வளைத்துவிட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் அதிமுகவும் நயினார் நாகேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் பரவின.
பேரம் பேசிய பாஜக
இதனால் டென்ஷனாகிப் போனது பாஜக. நயினார் நாகேந்திரனை தக்க வைத்துக் கொள்ள பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டது பாஜக. ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து உங்களை ராஜ்யசபா எம்.பி.யாக்குகிறோம்; கட்சி மட்டும் தாவிவிடாதீங்க என பேரம் பேசியது பாஜக.
கொரோனாவால் தனிமை
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில்தான் நயினார் நாகேந்திரன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை!!🙏🙏 என பதிவிட்டுள்ளார்.