இது லிஸ்ட்லயே இல்லையே.. டக்கென ரூட்டை மாற்றும் பாஜக.. மொத்தம் 3 பிளான்கள்.. தடதடக்கும் தென்மண்டலம்
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பாஜக 3 திட்டங்களுடன் களமிறங்க உள்ளது
சென்னை: எம்பி தேர்தலை முன்னிட்டு, இப்போதே காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது பாஜக மேலிடம்.. அந்த வகையில் தமிழகத்திலும் ஒரு சில திட்டங்களை களமிறக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
உள்ளாட்சி தேர்தலுக்கான மும்முரத்தில் தமிழக கட்சிகள் உள்ளன.. இப்போதைக்கு திமுக, பாமக, தேமுதிக கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆனால், அதிமுக ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.. அதிமுகவே இப்படி என்றால், அதன் கூட்டணியில் உள்ள பாஜக பற்றி தெரியவே இல்லை.. ஆனால், நடக்க போகும் எம்பி தேர்தலில் அவர்களின் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.
குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் பரிசளித்த 7 புத்தகங்கள் என்னவெல்லாம் தெரியுமா?.. எல்லாமே செம சூப்பர்!
பேட்டி
சில நாட்களுக்கு முன்பு சீமான் ஒரு பேட்டி தந்திருந்தார்.. பாஜக சாதீய கட்சிகளை அதிகமாக நம்புகிறது.. அதனால் தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடுவார்கள்.. சென்னையை , புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள்.. மாநிலங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இவர்கள் பிரிக்க வேண்டியது நியாயமாக அதிக தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தைததான்" என்று கூறியிருந்தார்.
தேர்தல்
சீமான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், மாவட்ட வாரியாக அல்லது மண்டலம் வாரியாகத்தான் தமிழகத்தை பாஜக குறி வைத்துள்ளது தெரியவருகிறது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட தென் தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தியது..
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி அன்று டெல்லி சென்றபோதுகூட, தென்தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் வெற்றி குறித்தே பேசப்பட்டுள்ளது.. இதற்காகவே சசிகலாவை உள்ளே சேர்த்து கொள்ளும்படியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், சசிகலா இல்லாமலேயே தன்னால் தென் மாவட்டங்களில் வெற்றியை பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து விட்டு வந்தார்.. ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
நிர்ப்பந்தம்
இனி அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ள நிலையில், பாஜக கூட்டணிகளையே இந்த முறையும் நம்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.. திராவிட கட்சிகள் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்ற சரித்திர உண்மையை பாஜக மேலிடம் உணர்ந்திருப்பினும், ஏதாவது ஒரு திராவிட கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.. அதேசமயம், அந்த திராவிட கட்சி மேலெழுந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாகவே பார்த்து கொண்டு வருகிறது.
செல்வாக்கு
இன்னொரு பக்கம், சொந்தமாகவே தங்கள் கட்சியின் பலத்தை கூட்டவும் முயற்சித்து வருகிறது.. புது புது பிரமுகர்கள், விஐபிக்கள், நடிகர், நடிகைகளை கட்சிக்குள் இழுத்து வந்தாலும், கட்சிக்கென்று தனி செல்வாக்கு ஒன்று தேவை என்பதையும் உணர்ந்துள்ளது.. அதற்கான முயற்சிகள்தான் தற்போது கையில் எடுக்கப்பட்டு வருகிறது.. அதற்காக 3 விதமான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
முக்குலத்தோர்
அதிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் குறி வைக்கப்பட்டே இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டும் வருகின்றன.. அதிமுகவில் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து பேசுகின்றனர்.. அதிமுகவின் தற்போதைய நிலைமையை அவர்களிடம் எடுத்து சொல்லி, மெல்ல பாஜக பக்கம் இழுக்கும் முயற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.
தென்மாவட்டங்கள்
அதேபோல, தென்மாவட்டங்களில் உள்ள மாஜி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றியவர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளனர்.. அவர்களில் தேசிய சிந்தனை யாருக்கு உள்ளது என்பதை கண்டறிந்து அவர்களையும் பாஜக பக்கம் இழுக்கும் முயற்சி உள்ளதாம்.. இதைதவிர, தனியார் பொது சேவை அமைப்புகளில் பாஜக ஆதரவுடன் இருக்கும் என்ஜிஓக்கள் குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.. அவர்களை ஒருங்கிணைத்து, கிராமந்தோறும், மக்கள் பணியில் இறங்கினால், கிராமங்களிலும் பாஜக வலுப்பெறும் என்றும் கணக்கு போடப்படுகிறது..