தமிழக சட்டசபையில் பிப்ரவரி 14-ல் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
சென்னை: 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்ரவரி 14-ந் தேதி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இத்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-ந் தேதி பேசினார்.
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் சபைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் நடப்பு கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 9-ந் தேதி மறுதேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 14-ந் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார் என சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.