காவிரி டெல்டா- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை. இதனடிப்படையில் அண்மையில் காவிரி டெல்டா பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்நிலையில் சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் கொள்கை முடிவுவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு முதல்வர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான சட்ட முன் வடிவை நாளை சட்டசபையில் தாக்கல் செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.