அனைத்து மாவட்டங்களில் தட்டுப்பாடின்றி ரெம்டிசிவிர் மருந்து- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 6 முடிவுகள்
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தட்டுப்பாடு இல்லாமல் ரெம்டிசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நாளை முதல் 2 வார காலத்துக்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது.
செம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்!
தமிழக அமைச்சரவை கூட்டம்
இதற்காக நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் முழுமையாக இரவு 9 மணிவரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கொரோனா தடுப்பு
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பது, ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையை எதிர்கொள்வது, முழு லாக்டவுனை முழுமையாக செயல்படுத்துவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் 6 முடிவுகள்
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்; அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கப்படும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
ரெம்டிசிவிர் மருந்து
மேலும் மருத்துவ ஆக்ஸிஜன் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்; எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்ஸிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது; ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்; அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.