கொரோனாவை எல்லாம் விட்டுத் தள்ளு.. தீபாவளியை கொண்டாடிய தமிழகம்- தேனியில் மோதல்- ஒருவர் பலி
சென்னை: கொரோனா பரவல் அச்சத்தைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை சனிக்கிழமையன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
Recommended Video
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டது. கொரோனா பரவலை பற்றி எந்த வித கவலையும் இல்லாமல் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
8 மாதங்களுக்கு பிறகு.. தமிழகம்-கர்நாடகா இடையே இன்று துவங்கியது அரசு பஸ் சேவை.. 6 நாட்கள் மட்டுமே
அலைமோதிய மக்கள்
ஜவுளி கடைகளிலும் இனிப்பு கடைகளிலும் பொதுமக்கள் பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். முக கவசங்கள், சமூக இடைவெளி பற்றி எல்லாம் பொதுமக்கள் கவலை இல்லாமல் கூடி இருந்தனர்.
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
அத்துடன் பட்டாசுகள் வெடிக்க காலை 6 மணி முதல் காலை 7 மணி; இரவு 6 மணி முதல் இரவு 7 மணிவரைதான் நேரம் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இந்த நேர கட்டுப்பாடு எல்லாம் கடைபிடிக்கவே இல்லை. பகலிலும் இரவிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னையில் மக்கள் கூட்டம்
சென்னை நகரிலும் பல இடங்களிலும் கூட்டம் சனிக்கிழமையன்று அலைமோதியதை பார்க்கவும் முடிந்தது. குறிப்பாக மெட்ரோ ரயில்களில், வர்த்தக நிறுவன் கடைவீதிகளில் மக்கள் பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர்.
நேர கட்டுப்பாடு மீறல் வழக்குகள்
இதனிடையே நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகத்தின் பல இடங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். புதுவையிலும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மோதல்- ஒருவர் பலி
இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி ஊராட்சி பகுதியில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் இரு பிரிவினரிடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் சுப்பையா மகன் முருகன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
106 தீ விபத்துகள்
தமிழகத்தில் தீபாவளி நாளில் மொத்தம் 106 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் மட்டும் 40 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் ராக்கெட் வெடியால் 33 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.