தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் இன்று உணர்வுப்பூர்வமாக கொண்டாட்டம்!
சென்னை: தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான இன்றைய நாள் தமிழ்நாடு நாளாக தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் கொண்டாப்பட்டு வருகிறது.
நாடு விடுதலை அடைந்த போது பல்வேறு மாகாணங்கள் நடைமுறையில் இருந்தன. பின்னர் மாகாணங்களை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தமிழ்நாடு மாநிலம் உதயம்
இதனடிப்படையில் மாகாணங்கள் மொழிவாரியாக மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சென்னை மாகாண பகுதிகளும் மொழிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தமிழ் பேசும் பகுதிகள் அனைத்தும் மெட்ராஸ் ஸ்டேட்- மெட்ராஸ் மாநிலமாக 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் உதயமானது. பின்னர் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றினார் பேரறிஞர் அண்ணா.
தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு மாநிலமாக உருவான நாள் நவம்பர் 1. ஆகையால் தமிழ்நாடு நாள் என தமிழக அரசால் கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜொலித்த கோட்டை
தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமை செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின் விளக்குகளால் தலைமை செயலகமான கோட்டை ஜெகஜோதியாய் ஜொலித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்தியில், தமிழ் எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம். அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
மாநில உரிமைகளை மீட்போம்- ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்து செய்தியில், மொழி - இன உணர்வும், மாநில உரிமைகளும் பழுதுபடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது. மாநில உரிமைகள் கடுமையான சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1-ஆம் நாளில், நாம் தமிழ்மொழி - இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்திட உறுதியேற்போம்! மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்! என கூறியிருக்கிறார்.