மக்களை தேடி மருத்துவம் திட்டம்- தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்- 1கோடி பேருக்கு வீட்டில் சிகிச்சை
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வீடுகளை தேடி மருத்துவ உதவிகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் கிராமப்புற மருத்துவ சேவைகளுக்காக மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்த காலத்தில் இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிந்தவர்கள் பிற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போதைய திமுக ஆட்சி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்துகிறது. இன்று கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் சென்றடைந்தார். ஓசூர் ஹோட்டலில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சூளகிரி சென்றார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. இலங்கை ராணுவத்தைத் தடுத்து நிறுத்துங்கள்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இன்று முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம்
சூளகிரி அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது சில வீடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருந்து மாத்திரைகள் வழங்கினார். பின்னர் பயனாளியின் வீட்டிற்கு சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை பார்வையிட்டார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்வை
மேலும் செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களுக்கு 3 புதிய வாகனங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அத்துடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக 7 மாவட்டங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெட்டமுலாயம் மலை கிராமத்துக்கு செல்கிறார் ஸ்டாலின். அந்த கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் இன்று வழங்கப்படுகிறது. சூளகிரி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து காரில் ஓசூர் விமான நிலையம் செல்கிறார். பின் ஓசூரில் இருந்து சென்னை புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அமைச்சர் மா.சு. விளக்கம்
இத்திட்டம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா காலத்தில் மருந்து மாத்திரைகளை வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் சிரமங்களைப் போக்குவதற்கு தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து சுமார் 1 கோடி பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கப்படும். இந்தப் பணியை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்வார்கள். அனைத்து வகை நோயாளிகளையும் கண்டறியும் பணியை முறையாகச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
எந்த நோய்களுக்கு சிகிச்சை?
தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதே மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் முக்கிய நோக்கம. இ்து சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. உயர் ரத்த அழுத்தம், காசநோய், பல வகை புற்றுநோய்கள், நீரிழிவு, சிறுநீரக பிரச்னைகள் உள்ளிட்ட உடல் நலன் சார் பிரச்சனை உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம். சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் பலர் இருக்கின்றனர். புற்றுநோய் பாதிப்பும் அதிக அளவில் உள்ளது. ஆனால் இவர்களில் பலர் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆகையால் இத்தகைய நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மாதந்தோறும் தேவையான மாத்திரைகளை வழங்குவது, மருந்துகள் கொடுப்பது, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்தல், பிசியோதெரபி சிகிச்சைக்காக பிசியோதெரபிஸ்டுகள் மூலம் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்தல் ஆகியவைதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
1 கோடி பேர் பயனடைவர்
முதல் கட்டமாக நகரம், கிராமப்பகுதிகளை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடையும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 1 கோடி பேரை சென்றடையும் வகையில் விரிவாக்கப்படும். இத்திட்டமானது 257 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். கடந்த கால திமுக ஆட்சியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்களுக்கு பெரும் பயன்தரக் கூடியதாக இருந்தது. அதேபோல் தற்போதைய மக்களைத் தேடி மருத்துவம் திட்டமும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் குக்கிராமங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.
விழுப்புரத்தில் மக்களை தேடி மருத்துவம்
விழுப்புரத்தை அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை, அமைச்சர் க.பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் க.பொன்முடி, மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீடுகளைத் தேடி, மக்களை நாடி வரும் நோய்த் தடுப்பு பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, பெரிய செவலை கிராமத்தைச் சேர்ந்த, கொரோனாவால் உயிரிழந்த தம்பதியரின் குழந்தைகளான கயல்விழி, தென்னரசு ஆகிய இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ததற்கான, அரசின் ஆணையை வழங்கினார். மேலும், பிசியோதெரபிஸ்ட் மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை செவிலியர்களுக்கு, நாள்பட்ட நோயுடைய வயோதிகர்கள், படுக்கை நிலையில் உள்ள நாள்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மருத்துவ உதவி வழங்குவதற்கான, மருத்துவ கிட் வழங்கினார்.