அன்னையர் தினம்- தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு தாயார் தயாளு அம்மாளிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வாழ்த்து பெற்றார்.
தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அங்கு தாயார் தயாளு அம்மாளிடம் அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுக் கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கங்களில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!
எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.