'ஓய்வு உறக்கமின்றி உழைக்கும் அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன்.. நிற்பேன்..'முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மிக அதிக மழை பெய்யும் இக்காலத்தில் நேரம், காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் தானும் களத்தில் நிற்பேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு நல்ல மழை பெய்து வருகிறது.
கோவையில் ரயில் மோதி.. 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருவது நல்ல செய்தி தான் என்றாலும் கூட பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சென்னை மழை பாதிப்பு
முதலில் நவம்பர் தொடக்கத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. பல சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ள நீரை வெளியேற்றி, இதில் இருந்து மீண்டு வரவே சில நாட்கள் வரை ஆனது.
மீண்டும் கனமழை
இதேபோல கடந்த வாரமும் சென்னையில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இருப்பினும், அப்போது எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இந்தச் சூழலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள்
தலைநகர் சென்னையில் இந்த மாதம் மட்டும் 1000 மி.மீ மழை பதிவானதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது 4ஆவது முறையாகும். இதன் காரணமாக சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீரை வெளியேற்றும் பணிகளும் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டாரை கொண்டு வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர்.
முதல்வர் ஆய்வு
வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். நவம்பர் தொடக்கத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்தார். அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதேபோல தற்போதும் தலைநகர் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். முதல்வரே நேரடியாகக் களத்திற்கு வந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வது, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகப் பொதுமக்கள் பலரும் கூறி வருகின்றனர்,
1000 மிமீ மழை
இந்நிலையில், மிக அதிக மழை பெய்யும் இக்காலத்தில் நேரம், காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் தானும் களத்தில் நிற்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச் சேதங்களைக் குறைத்து;
களத்தில் நிற்பேன்
பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது! அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!" என பதிவிட்டுள்ளார்.