ரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமி
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2556 ரூபாயும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள். அதே போன்று கட்டுனர்கள் குறைந்தபட்சமாக 2337 ரூபாயும், அதிகபட்சமாக 3500 ரூபாயும் கூடுதலாக பெறுவார்கள்.
தமிழகத்தில் மொத்தம் 33,222 ரேஷன் கடைகளில் மொத்தம் 2.07 லட்சம் குடும்ப அட்டைகள் மூலமாக பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு பட்டியலில் தற்போது ரேஷன் கடை ஊழியர்களின் சம்பள உயர்வும் இடம்பெற்றுள்ளது. அதற்கான அறிவிப்பாணையும் இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் 5,000 ரூபாயில் இல் இருந்து ரூ. 6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 8,600 - ரூ. 29,000 வழங்கப்பட உள்ளது.
இதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 4,250ல் இருந்து ரூ. 5,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ. 7,800 ரூ. 26,000 வழங்கப்படவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தையும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வின் மூலம் 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள் என்றும், 19 முதல் 24 சதவிகிதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பை தொடர்ந்து மேலும் சில அதிரடி அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.