ஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்!
தமிழக நலன் குறித்து, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக நலன்கள் சம்பந்தமான அனைத்து விதமான, பிரச்சனைகள், கோரிக்கைகள், வேண்டுகோள்களை ஏழு நிமிடத்தில் பேசிவிட்டு வந்துள்ளார்!
இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்து பேச போகிறார் என்றதுமே தமிழகம் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது. மோடி 2-வது முறையாக பதவியேற்று, முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது.
இதில், கலந்து கொள்ள நாட்டின் எல்லா மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நம் முதல்வரும் இதில் கலந்துகொள்ள டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றனர்.
இன்று காலை பிரதமரின் இல்லத்தில் மோடியை சந்தித்து பேசினார் முதல்வர். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதிஒதுக்குவது குறித்தும், வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் முதல்வர் வழங்கி உள்ளார்.
மேலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை எடுத்து சொல்லி, காவிரியில் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி தரக்கூடாது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தியதாக தெரிகிறது.
பிரதமருடனான தமிழக முதல்வரின் இந்த சந்திப்பு நடந்தது ஏழு நிமிடங்கள்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அனைத்து தமிழகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க நேரமில்லாமல், மனுவாக தரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நம் மாநிலத்தில் கடுமையான பிரச்சினையாக மாறியிருக்கும் தண்ணீ்ர்ப் பிரச்சினை குறித்து பேசப்பட்டதா என்று தெரியவில்லை.