கொரோனா: விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். மேலும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 22-ந் தேதி முதல் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி - உடல்நிலை சீராக இருக்கிறது: மியாட் மருத்துவமனை
நலம் விசாரித்த முதல்வர்
விஜயகாந்த் உடல்நலம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். @iVijayakant அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இறைவனை வேண்டுகிறேன் - ஓபிஎஸ்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் @iVijayakant அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மீண்டும் முழு உற்சாகத்துடன்... -ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான @iVijayakant அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
பிரார்த்திப்போம்- பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா, நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்குஅப்பாற்பட்டு,மிகச் சிறந்த மனிதர்.அவருக்கு coronaதொற்றுஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறசெய்தி கவலையளிக்கிறது. அவர்தொற்றில்இருந்துபூரண குணமடைந்து விரைவில்வீடு திரும்ப பிரார்த்திப்போம் என கூறியுள்ளார்.