இடைத்தேர்தலில் பணம் கொடுக்கும் திமுக... தமிழிசையை சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி புகார்
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் பணம் கொடுத்து வெற்றி பெற திமுக முயற்சிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்ற பின்னர் சென்னை வருகை தந்துள்ள தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமிக்கப்பட்ட போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார்.
வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி. இந்நிலையில் சென்னையில் நேற்று தமிழிசையை நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மேதகு தெலங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். pic.twitter.com/7yQInVagI2
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 8, 2019
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா ஆளுநராக தமிழிசையை நியமித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெல்ல திமுக முயற்சிக்கிறது.
ஆனால் இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களே வெல்வார்கள். சிறப்பான வசதிகள் கொண்ட சிங்கப்பூர் நாட்டிலும் கூட டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. தமிழக அரசு நெருக்கடி கொடுத்ததால் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது.
கீழடியில் அருங்காட்சியம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.